துாத்துக்குடி: பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பகீர் தகவல்கள்

துாத்துக்குடி: பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 10 ம் தேதி மாலை மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவி சடலமாக கிடந்தார்.

குளத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன், 39, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின் துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி கொலை தொடர்பாக தர்ம முனீஸ்வரன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவல் துறையினர் சிலர் கூறியதாவது: கடந்த 2020 ல் கீழஈரால் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த தர்ம முனீஸ்வரன் அவரை கொலை செய்து நகை திருடிய வழக்கில் வாழ் நாள் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். அவருடைய தாய் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கறிஞர் மூலமாக மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தினமும் துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

செலவிற்கு பணம் இல்லை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் பைக் திருடி கொண்டு சுற்றி வந்துள்ளார். கிராமங்களில் காட்டுபகுதிக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், இயற்கை உபாதை கழிக்க செல்லும் பெண்களை குறி வைத்து அவர் தேடி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த நாளில் துாத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு குறுக்குச்சாலை – குளத்துார் சாலையில் அவர் சுற்றி வந்துள்ளார். நோட்டம் பார்தத்தில் வேடநத்தம் பகுதியில் பெண்கள் இயற்கை உபாதை கழிக்கும் காட்டு பகுதியை பார்த்துள்ளார்.

அந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னரே தனியாக வரும் பெண்ணை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க அமர்ந்த போது அங்கு கிடந்த கம்பால் தலையின் பின் பகுதியில் ஓங்கி தாக்கி உள்ளார்.

மாணவி மயங்கி கீழே விழந்ததும் நகை ஏதும் இருக்கிறதா என பார்த்து உள்ளார். பின்னர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்குள்ள முட்புதர் பகுதியில் இழுத்து போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். மாணவியை கொலை செய்த பிறகும் சில நாட்கள் அந்த பகுதியில் சுற்றி திரிந்து மட்டுமின்றி கிராம மக்களிடம் வழக்கு குறித்து விசாரித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link