துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,

ம.வெங்கடேசன்

ve*********@***il.com

‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவருடைய ஆசையை துாண்ட வேண்டும்’ என்று ஒரு படத்தில் வசனம் வரும். அதை, கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தி.மு.க., கடைப்பிடித்து வருகிறது.

கடந்த 1967ல், ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம்’ என்று சொன்னார்கள்; மக்கள் நம்பினர். ஆனால், ஆட்சிக்கு வந்தபின் அதை செயல்படுத்தவில்லை.

பின்னர் 2006ல், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று சொன்னார்கள்; விவசாயிகள் நம்பினர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளை தி.மு.க., ஏமாற்றியது. அதுபோல தான், துாய்மை பணியாளர்களை தி.மு.க., ஏமாற்றியது.

இன்றைக்கு தமிழக மக்கள் சுகாதாரமாக இருக்கின்றனர், நோய் தாக்காமல் இருக்கிறது, தெருக்கள் சுத்தமாக இருக்கின்றன என்று சொன்னால், அதற்கு காரணம் துாய்மை பணியாளர்கள் தான். எப்படி மருத்துவர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்படுகின்றனரோ, அதுபோலவே துாய்மை பணியாளர்களையும் கடவுளாக தான் நாம் கருத வேண்டும். நாம் நோயுறாமல் சுகாதாரமாக இருப்பதற்கு, தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கும் துாய்மை பணியாளர்களை, தி.மு.க., திட்டமிட்டு ஆசைகாட்டி ஏமாற்றியது என்பது மன்னிக்க முடியாதது.

பொய் வாக்குறுதி

இவர்களை தி.மு.க., ஏமாற்றுவதற்கு என்ன காரணம்? கிட்டத்தட்ட 90 சதவீதம் துாய்மை பணியாளர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுதான் காரணம்; அதுதான் ஒரே காரணம்.

இவர்களை, தி.மு.க., எப்படி ஏமாற்றியது என்பதே ஒரு சதுரங்க வேட்டை கதை. 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், சென்னை மாநகராட்சியில் துாய்மை பணி செய்து வந்த 12,000 பேர் நீக்கப்பட்டனர். இவர்கள், ‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி’ என்ற திட்டத்தின் கீழ் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டவர்கள். இதை, தி.மு.க., ஒரு வாய்ப்பாக பார்த்தது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையரிடம், ஸ்டாலின் பெயரில் மா.சுப்பிரமணியன் ஒரு கடிதம் கொடுத்தார். அப்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்கள் அனைவரையும் நிரந்தர பணியில் அமர்த்துவோம்’ என்று காரசாரமாக பேசி ஆசை காட்டினார்.

அடுத்து, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, துாய்மை பணியாளர்களை அழைத்து, ஸ்டாலின் ஒரு கூட்டம் நடத்தினார். அதில், துாய்மை பணியாளர் பெண் ஒருவரை பேச வைத்தனர். அவர், அழுதுகொண்டே தங்களுடைய பிரச்னைகளை சொன்னார். உடனே, ‘இன்னும் இரண்டு மாதங்கள்தான். நீங்கள் பொறுத்திருங்கள். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் உங்கள் பிரச்னை தீரும். நீங்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவீர்கள்’ என்று, அவர்கள் ஆசையை துாண்டினார் ஸ்டாலின்.

இதை நம்பிய துாய்மை பணியாளர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டனர். தி.மு.க., வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், அவர்களை பணி நிரந்தரமும் செய்யவில்லை; தனது தேர்தல் அறிக்கையில், அவர்களை குறிவைத்து கொடுத்த ஐந்து வாக்குறுதிகளான, எண் 281- – 285ல் ஒன்றைக்கூட இன்னும் நிறைவேற்றவும் இல்லை.

ஆசைவார்த்தை கூறி தமிழக மக்களை ஏமாற்றுவது என்பது தி.மு.க.,வின் மரபணுவிலேயே உள்ளது என்பதை, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., நிரூபித்து வருகிறது.

பணி நிரந்தரத்திற்கு மாறாக, ஐந்து ஆண்டுகளில் பணி நிர்மூலமாக்கப்பட்டு இருக்கிறது. பல பகுதிகளில், துாய்மை பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட தி.மு.க., நிர்வாகிகளின் பினாமிகளை போல் செயல்படும் இந்த தனியார் நிறுவனங்கள், வேலைக்கேற்ற, அரசு நிர்ணயித்த ஊதியம் கொடுப்பதில்லை.

போனஸ் கிடையாது. எட்டு மணி நேரம் உத்தரவாதம் கிடையாது. 10- – 11 மணி நேரம் கூட வேலை செய்ய நிர்ப்பந்தம் உண்டு. வார விடுமுறை கிடையாது. விடுமுறை எடுத்தால் அன்று சம்பளம் கிடையாது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது சட்டத்தில் மட்டுமே உள்ளது. தி.மு.க., அரசு கண்டுகொள்வதும் இல்லை.

இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தத்திலும் குளறுபடிகள் உள்ளன. சரியான தொகையை பிடிப்பதில்லை. அதன் விபரத்தையும் தெரியப்படுத்துவதில்லை.

ஊராட்சி, நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் தற்காலிக துாய்மை பணியாளர்களுடைய நிலை இன்னும் மோசம். அவர்களுக்கு மாத சம்பளமே 2,000 ரூபாய்க்கும் குறைவு தான். எந்தவித கூடுதல் பலன்களும் கிடையாது. ஆனால், தினமும் 5 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது.

தங்களை நயவஞ்சக ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றியதை, துாய்மை பணியாளர்கள் உணர்ந்து கொண்டனர். அதனால் தான், கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களை அடித்து துன்புறுத்தி, மனிதநேயமற்ற முறையில் பெண்களை தரதரவென இழுத்து, வேனில் ஏற்றி அப்புறப்படுத்தியது தி.மு.க., அரசு.

முதல்வர் வந்தாரா?

பல மாதங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும், முதல்வரோ, துணை முதல்வரோ ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை. அவர்களுடன் பேச்சு நடத்தவில்லை. திரை பிரபலங்களை வீட்டிற்கே போய் சந்திக்கும் ஸ்டாலின், ஒருமுறைகூட துாய்மை பணியாளர்களை வந்து சந்திக்கவில்லை. நேரில் அழைத்தும் பேசவில்லை.

துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் துாரம் உள்ள இடத்தில் அமைதி பேரணி நடத்திய ஸ்டாலின், துாய்மை பணியாளர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு ஏன் தயங்கினார்? ஏனென்றால், அவர்கள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள்.

தி.மு.க., எப்போதுமே பட்டியல் சமூகத்தவரை சக மனிதர்களாக பார்க்காமல் ஓட்டு வங்கிக்கான பொருளாகவே பார்த்து வருகிறது. அதனுடைய நீட்சியாக தான் துாய்மை பணியாளர்களை ஏமாற்றி வருகிறது தி.மு.க.,

துாய்மை பணியாளர்களுடைய பிரச்னை தீர வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.

Source link