தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, மார்ச், 10ல் திடீரென மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில், ஆடைகள் களைந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

குளத்துார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில், மாணவி மாயமானதாக புகார் வந்ததும் வழக்கு பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான். இவன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் கூறுகையில், ”இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

Source link