தென் மாவட்டங்களில் பரவலாக மழை- Widespread rain in the southern districts

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கல்லல் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகாலையிலேயே மழை பெய்ததால் வேலைக்கு செல்வோர் சற்று சிரமத்துடன் குடைகளை பிடித்தவாறு தங்களது பணிகளுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போதைய மழை பொதுமக்களின் புழுக்கத்தை பெருமளவில் குறைத்தது. மழை காரணமாக இப்பகுதி விவசாயிகளும் கோடை உழவு உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மதுரை நகரில் இன்று காலை முதலே பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், எல்லீஸ் நகர், வசந்த நகர், மகபூப்பாளையம், காளவாசல், திருப்பரங் குன்றம், நரிமேடு, பீ.பீ.குளம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சிரமத்தை சந்தித்தனர். எனினும் காலநிலை குளுமையாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்கினர்.

Source link