தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரேமலதா கையெழுத்து போட்டனர்.

ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ம் தேதி துவங்குகிறது. இதனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4, முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாலை, முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஏற்கனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதில், சுதீஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 ம் தேதி வேட்பாளர் பட்டியல்

பிறகு பிரேமலதா கூறியதாவது: தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார்.இக்கூட்டணி நிச்சயம் பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் அறிவிக்கப்படும். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து நாளையும், நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கும். 27 ம் தேதி தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்.,1ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வோம்.

போட்டியிடும் உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கி உள்ளோம். நாளையும், நாளை மறுநாளும் பேசி முடிவு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது மதசார்பற்ற வெற்றி கூட்டணி. இது தொண்டர்கள் விரும்பிய கூட்டணி. தொண்டர்கள் வரவேற்கும் கூட்டணி. அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

முதல்முறை வெற்றி பெற்றது விருத்தாசலம். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கியது ரிஷிவந்தியம். அந்த தொகுதிகள் உத்தேச பட்டியலில் உள்ளது. ஏற்கனவே தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகளும் உத்தேச பட்டியல் உள்ளது. விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும் உள்ளது. குடியாத்தம், ஆம்பூர், விருகம்பாக்கம் தொகுதியும் உத்தேச பட்டியலில் உள்ளது. 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி உள்ளோம். நாங்கள் லேட்டாக வந்தாலம் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளோம்.

இதைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். நாங்களும் விட்டு கொடுத்த பிறகு தான் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. கூட்டணி தர்மத்துக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link