தேர்தலில் போட்டியில்லை: திருமாவளவன் பல்டி

சென்னை: “சட்டசபை தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை, ஜோதிமணி இளையபெருமாள் போட்டியிடுவார்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

சட்டசபைக்கு செல்ல விரும்பி, இதற்கு முன், மங்களூரு தொகுதியில் வென்றேன். இரண்டரை ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்தேன். பின் அ.தி.மு.க., கூட்டணியில், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், அப்போது, என்னுடன் பயணித்த, தற்போதைய தமிழக காங்., தலைவருக்கு விட்டு கொடுத்தேன்.

அப்போது போட்டியிட்டு இருந்தால், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட்டு இருப்பேன். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். பின், எம்.பி.,யானாலும், அவ்வப்போது சட்டசபைக்கு செல்ல ஆசை இருந்தது.

இந்த தேர்தலில் வலதுசாரி கைகள் ஓங்கி வருகின்றன. தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலதுசாரி கட்சிகள், என்னை கூட்டணியில் இருந்து விலக்க முயற்சித்தனர். தி.மு.க., கூட்டணி, தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருப்பதற்கு, நான் முக்கிய காரணம்.

இந்நிலையில், தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் என்பதால், கூட்டணி ஆட்சி அமையும்; எம்.பி., பதவியை விட்டு, சட்டசபைக்கு வரும் திருமாவளவன், துணைமுதல்வராக யோசிக்கிறார் என, அவதுாறுகளை பரப்புகின்றனர். மேலும், தி.மு.க.,வுக்கு சொம்பு துாக்கியதால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவதுாறு பரப்புகின்றனர்.

இந்த தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் சூழல் மாறும் என்பதால், சட்டசபையில் இருக்க ஆசைப்பட்டேன். என்னை யாரும் மன மாற்றம் செய்ய முடியாது. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

யுத்த களத்தில் முன்னோக்கி போவது ராஜதந்திரம் என்றால், ஒரு அடி பின்னால் போவதும் ராஜதந்திரம் தான். எனது நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். யுக்தியை மாற்றி அமைக்கிறேன். காட்டுமன்னார்கோவிலில், ஜாதி ஒழிப்புக்கு போராடிய, இளையபெருமாளின் மகன் ஜோதிமணி, வி.சி.க., வேட்பாளராக போட்டியிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Source link