டில்லி சிறப்பு நிருபர்
தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பது சட்டவிரோதம். இதனை தடை செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவின் விபரம்: தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதும் தொடர்கிறது.
தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பது சட்டவிரோதம். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை போன்ற செயல் என்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்.அதேபோல், நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து, ஓட்டுகளை பெறுவது மக்களை ஏமாற்றும் செயல். எனவே, தற்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி, தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
