சென்னை: ஓட்டுச்சாவடிகளில், ‘வெப் காஸ்டிங்’ எனும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு, தேர்தல் கமிஷன் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ல் நடக்க உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 75,000 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை கண்காணிக்கவும், ஓட்டு எண்ணிக்கை மையங்களை கண்காணிக்கவும், ‘வெப் காஸ்டிங்’ எனும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, தேர்தல் கமிஷன், கடந்த 3ம் தேதி ‘டெண்டர்’ கோரியது.
இதில் பங்கேற்க விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு நிபந்தனைகளை, தேர்தல் கமிஷன் விதித்துள்ளது. இதை எதிர்த்து, சென்னையை சேர்ந்த, ‘ஐ – நெட் செக்யூர் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் மிருதுல்,”டெண்டரில் கலந்து கொள்வதை தடுக்க, 100 கோடி ரூபாயை, விற்று முதல் கொண்டிருக்க வேண்டும் என, நியாயமற்ற நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் நிகழ்வுகளை, நேரடி ஒளிபரப்பு செய்ய, 1.50 லட்சம் ‘வெப் கேமராக்கள்’ மட்டுமே தேவைப்படும் நிலையில், எங்கள் நிறுவனத்தில், 1.80 லட்சம் வெப் கேமராக்கள் உள்ளன. எனவே, தேர்தல் கமிஷனின் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.
தேர்தல் கமிஷன் தரப்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ”தமிழகத்தில் கடந்த தேர்தலில், 45 ஆயிரம் ‘வெப் கேமராக்களை’ மட்டுமே பயன்படுத்திய நிலையில், வரும் தேர்தலில், இதை மூன்று மடங்காக அதிகரித்து, 1.50 லட்சம் கேமராக்களை பயன்படுத்த உள்ளோம். இந்த எண்ணிக்கையில் கேமராக்களை கையாளும் திறன் கொண்டுள்ள நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், நிபந்தனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. மனுதாரர் டெண்டரில் கலந்து கொள்ளவில்லை. இன்று பிற்பகல் 3:00 மணிக்கு டெண்டர் திறக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த அனுமதித்தால், தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும்,” என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக இன்று பதிலளிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
