தொடரும் வெடி சத்தம்!

தொடரும் வெடி சத்தம்! * போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது * சவுதி அரேபியா மற்றும் கத்தாரிலும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாயிலாக ஈரான் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன * இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் நேற்றும் பலத்த வெடி சத்தங்கள் கேட்டன * ஈரான் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தப்பட்டது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார்? மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் போர் நடத்தி வருகின்றன. இப்போரில் ஈரான் மிகவும் உறுதியுடன் இருப்பதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி கூறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், ஈரான் இதை மறுத்துள்ளது.

அமெரிக்க துாதரகம் மீது ட்ரோன் தாக்குதல்கள் ஈரானின் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு கொண்ட ‘கிரீன் ஸோன்’ பகுதியில் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நேற்று நடத்தப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கரும்புகை மற்றும் பலத்த வெடிப்பு சத்தங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தாக்குதலில் துாதரகத்தின் ஹெலிபேட் மற்றும் தகவல் தொடர்பு மையம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய தளபதிகள் பலி? ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் நேற்றுமுன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் துணை அமைப்பான பசிஜ் படையின் தலைவர் கோலம்ரேசா சொலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் கோலம்ரேசா உடன் அவரது அமைப்பின் துணை தலைவர் செய்யது கரிஷி மற்றும் பல மூத்த பசிஜ் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பு இந்த பசிஜ் படை. கடந்த ஜனவரியில் அந்நாட்டில் வெடித்த மக்கள் எழுச்சியை ஒடுக்க கோலம்ரேசா தலைமையிலான படை கடுமையான வன்முறையை பயன்படுத்தியதால், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Source link