திண்டிவனம்: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சியின் கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் இணைய மேற்கொண்ட முயற்சிகளில் எவ்வித முன்னற்றமும் ஏற்படாததால், நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து, கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை ராமதாஸ் கேட்டறிந்தார்.
நிர்வாகிகள் பலரும், ‘தனித்து போட்டியிடுவதை விட, பலத்தை காட்டும் வகையில் கூடுதல் ஓட்டுகளை பெற்று, ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வுக்கு அங்கீகாரம் கிடைக்க, ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதே நல்லது’ என கூறினர்.
இந்நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் தொடர்ந்த வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில், அன்புமணி தரப்பும், தேர்தல் கமிஷனும் விளக்கம் அளிக்க உள்ளன. அதன்பின், ‘யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவு வெளியாகும்’ என, ராமதாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், ‘வட மாவட்டங்களில், பா.ம.க., செல்வாக்கு உள்ள 35 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்’ என கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இது குறித்து, அருள் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, ‘அதுபோன்ற தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாது’ என்றார்.
