திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க., வருவது குறித்து எவ்வித பேச்சும் நடக்கவில்லை,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறார்; தி.மு.க., ஆட்சியின் அவலங்களையும் எடுத்துக் கூறி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க. வருவது குறித்து எவ்வித பேச்சும் நடக்கவில்லை. வெளியில் தான் செய்திகள் பரவி உள்ளன. எனக்கு தெரியாமல், யாரிடமும் யாரும் பேச மாட்டார்கள்.
டில்லிக்கும், தமிழகத்துக்குமான தேர்தல், என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். நடப்பது தமிழக சட்டசபைக்கான தேர்தல்.
அப்படியிருக்கும்போது, டில்லியை எங்கேயிருந்து கொண்டு வந்து சேர்க்கிறார் ஸ்டாலின். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர் கையில் முதல்வர் பதவி சிக்கி உள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீது யாரும் குறை சொல்ல முடியாது. அ.தி.மு.க., ஆட்சி பொற்கால ஆட்சி. ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.
எங்களை எதிர்த்து, நேரடியாக மோத முடியாத ஸ்டாலின், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க., தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என சிலர் கூறுகின்றனர்.
அவர்கள் நிலைதான் பரிதாபமாக உள்ளது. நித்திய கண்டம்; பூரண ஆயுசு என்பது போல், 20 நாட்களாக காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.,வும் வார்த்தைப்போர் நடத்தி போராடிக் கொண்டிருந்தன.
தி.மு.க., தற்போது கெஞ்சாத குறையாக, காங்கிரசுடன் பேசி கூட்டணியை முடிவு செய்து இருக்கிறது. இதில், தி.மு.க., எவ்வளவு கேவலப்பட்டது என உலகத்துக்கே தெரியும்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. ஆனால், அது குறித்த செய்திகள் பெரிதாக வெளியாவதில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
