நமது சிறப்பு நிருபர்ஈரான் ஒரு போதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது; போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ

நமது சிறப்பு நிருபர்

ஈரான் ஒரு போதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது; போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ முடியும் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஈரான் ஆட்சியாளரின் இந்திய பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி தெரிவித்தார்.

‘நறுக்’ கேள்வியும், ‘சுருக்’ பதிலும்!

பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: போர் முடிவுக்கு வரும் எனத் தோன்றுகிறதா?

இலாஹி: போரைத் தொடங்கிய நாடுகளைப் பொறுத்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தயாராக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆயுதங்களை விற்பதன் மூலம் இந்தப் போரில் ஆதாயம் அடைய அவர்கள் விரும்புகிறார்கள். எண்ணெய் விலை உயர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். ஏழை மக்களைப் பற்றியோ அல்லது நாடுகளைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை.

கேள்வி: எந்தச் சூழ்நிலைகளில் ஈரான் தனது அணுசக்திக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும்?

இலாஹி: எங்கள் தலைவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அணு ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டவை என்றார். அணு ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் அதை தயாரிக்கவும், வைத்திருக்கவும் விரும்பவில்லை. ஒருவேளை நாங்கள் அதை வைத்திருக்க விரும்பினால், அவர்களால் எங்களைத் தடுக்க முடியாது.

கேள்வி: ஈரான் தன்னை ஆட்சியாளராக்க விரும்பியது, நான் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறாரே?

இலாஹி: டில்லியில் உள்ள ஒரு இளைஞனிடமிருந்து இதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

கேள்வி: இந்திய மற்றும் ஈரானியத் தலைமைகள் வெற்றிகரமான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினீர்கள். அதைப்பற்றி விரிவாகக் கூற முடியுமா?

இலாஹி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கனைத் தொலைபேசியில் அழைத்து, நல்ல கலந்துரையாடல்களை நடத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஈரான் அதிபர், அமைச்சரை பலமுறை தொலைபேசியில் பேசினர். இரு தரப்பினரும் பிராந்தியத்தில் அமைதியை நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறோம்.

கேள்வி; எல்பிஜி பற்றாக்குறை ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறதே?

இலாஹி: இது இந்தியாவில் மட்டும் இல்லை. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் பல நாடுகளிலும் இதே நிலைதான். இந்த நாடுகளும் அவற்றின் தலைவர்களும் ஒன்றிணைந்து, இந்தப் போரைத் தொடங்கியவர்களை அதை நிறுத்தும்படி கேட்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த நெருக்கடியை ஈரான் உருவாக்கவில்லை.

கேள்வி; இந்தியா-ஈரான் உறவுகளை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்?

இலாஹி: ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு 5,000 ஆண்டுகள் பழமையானது. நான் இந்தியாவில் என் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். இந்திய மக்கள் அன்பானவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்கள். இந்திய மண் நீதி, சுதந்திரம், விடுதலை மற்றும் தாராள மனப்பான்மையின் பூமி என்று என்னால் கூற முடியும்.

கேள்வி: இந்தியா-ஈரான் உறவுகள் தொடர்ந்து நீடிக்குமா?

இலாஹி: நிச்சயமாக. இந்தியத் தலைவர்கள் புத்திசாலிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் முடிவுகளில் மற்றவர்களையும் மூன்றாம் தரப்பினரையும் தலையிட அனுமதிப்பதில்லை.

கேள்வி: தற்போதைய போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறதா?

இலாஹி: இல்லை. அது உண்மையல்ல. பாகிஸ்தானில் உள்ள எங்கள் தூதர் அதை மறுத்து, நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறினார். இது வெறும் ஊடகப் பரபரப்பிற்கு சித்தரிக்கப்பட்ட செய்தி.

கேள்வி: பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்வதிலும், அதனை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவிற்கு ஒரு பங்கு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

இலாஹி: ஆம், நிச்சயமாக, இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா ஒரு நல்ல பங்கை ஆற்ற முடியும். இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து நாடுகளும் ஒரு பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கேள்வி: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், நிலையான எரிசக்தி விநியோகம் குறித்து ஈரான் இந்தியாவிற்கு உறுதியளிக்க முடியுமா?

இலாஹி: ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு நிலையாக இல்லை. எனவே, அனைத்து நாடுகளும் இந்தப் போரை நிறுத்துமாறு டிரம்ப் மற்றும் பிறரைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஈரான் மீது இரவும் பகலும் குண்டு வீசுகிறார்கள். அவர்கள் பொதுமக்களைக் கொல்வதோடு, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், வீடுகள், விளையாட்டு அரங்கங்கள் மீதும் குண்டு வீசுகிறார்கள்.

கேள்வி: இதுவரை எத்தனை மரணங்கள்?

இலாஹி: மிக அதிகம். எனக்குச் சரியான எண்ணிக்கை தெரியாது, ஆனால் இரண்டு வயதுக்குட்பட்ட 270க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது எனக்குத் தெரியும். டெஹ்ரானில் உள்ள காந்தி குழந்தைகள் மருத்துவமனை தாக்கப்பட்டது. ஒரு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 175 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் பள்ளிகள், மசூதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைத் தாக்கினர்.

கேள்வி; அலி கமேனி படுகொலை செய்யப்பட்டபோது இந்தியா எதுவும் கூறவில்லை என்ற விமர்சனம் எழுந்ததே?

இலாஹி: ஏராளமான இந்தியர்கள், ஹிந்துக்கள் உட்பட, தங்கள் அனுதாபத்தையும், ஒற்றுமையையும், கண்டனத்தையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

கேள்வி: ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி ஆளுமை எப்படி?

இலாஹி: புதிய தலைவர் என் நண்பர். நாங்கள் வகுப்புத் தோழர்கள். அவர் ஒரு அறிவாளி. தன் தந்தையிடமிருந்து கற்றவர். அவர் பணிவானவர். அவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது. அவர் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்.

அவரிடம் கார் இல்லை. வங்கிக் கணக்கு இல்லை. அவர் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். சமீப காலம் வரை, அவர் பாலும் ரொட்டியும் வாங்குவதற்காகக் கடன் வாங்கிக்கொண்டிருந்தார். நான் அவரை ஏதேனும் ஒரு நாட்டிற்கு அழைக்கும்போது, ​​அவர் வருவதில்லை.

நான் அவரிடம், ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்டால், பணம் இல்லை என்று சொல்வார். அவர் வலிமையானவர். அவர் தனது கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் விற்றுவிடுவதில்லை. அவர் மக்களிடம் நேர்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link