நமது சிறப்பு நிருபர்கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா ‛சீட்' கொடுத்து அமுக்கியது போதும் என திமுக நினைத்துவிட்டது

நமது சிறப்பு நிருபர்

கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா ‛சீட்’ கொடுத்து அமுக்கியது போதும் என திமுக நினைத்துவிட்டது போலும். அதனாலேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக அழுத்தம் கொடுத்தது. அந்த அழுத்தத்தின் வெப்பத்தை உணர்ந்து கொண்ட கமல், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், ‘தேர்தலிலேயே போட்டியிடவில்லை’ என்று ஜகா வாங்கி விட்டார்.

டுவிஸ்ட்

இந்த ‛‛டுவிஸ்ட்’ யாரும் எதிர்பாராதது. இது, கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான முடிவு, என்று சிலரும், தேர்தலில் போட்டியிடாத கட்சி, களத்தில் இருந்து காணாமல் போகும் என்று சிலரும் சுட்டிக்காட்டுகின்றனர். திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் மநீமவுக்கு பெரிய பெயர் கிடைக்கப் போவதில்லை. அந்த ஓட்டுகளும் திமுகவின் கணக்கில் தான் ஏறும். அதை கமல் தடுத்துவிட்டார் என்கிறார்கள் கமல் முடிவை ஆதரிப்பவர்கள்.

முன்பு மதிமுக இதே போன்ற தவறை செய்ததால் கரைந்து போனது என்கின்றனர் கமல் முடிவை எதிர்ப்பவர்கள். எது எப்படியோ, டார்ச் லைட்டை எரிய விடாதபடி உதயசூரியன் சுட்டுவிட்டது. கமல் முடிவால், மநீமவுக்கு கொடுக்கலாம் என்று வைத்திருந்த 2 தொகுதிகள் திமுகவுக்கு மிச்சம். ஏற்கனவே தேமுதிகவுக்கு 10, விசி-க்கு 8 தொகுதிகளை கொடுத்துவிட்டு, விழித்துக்கொண்டு இருந்த திமுகவுக்கு 2 தொகுதிகளை பரிசாக’கொடுத்து திமுகவை திக்குமுக்காட வைத்திருக்கிறார் கமல்.

தியாகமா, தந்திரமா

‘இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு, எதற்காக மூன்று கட்ட பேச்சு நடத்த வேண்டும்; விருப்பத் தொகுதி பட்டியல் தர வேண்டும், முந்தைய தேர்தலில் வாங்கிய ஓட்டு எண்ணிக்கை விவரம் தர வேண்டும்’ என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கமல் கட்சி நிர்வாகிகள். கமல் முடிவை தியாகம் என்கிறார் முதல்வர்; ‘அவருக்கு லாபம்; அப்படித்தான் சொல்வார். தியாகமா, தந்திரமா என்பதை காலம் தான்’ சொல்லும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

Source link