நமது சிறப்பு நிருபர்
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ள அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர், அவரது ஆதரவாளர்களும், அபிமானிகளும்.
கூட்டணி வைக்க வேண்டுமானால் தமிழக பாஜவுக்கு அண்ணாமலை தலைவராக இருக்கக் கூடாது என்று முன்பு இபிஎஸ் போட்ட ‛‛கண்டிஷனுக்கு” கட்டுப்பட்டது பாஜ. சொன்ன சொல்லை இரு தரப்பும் காப்பாற்ற கூட்டணி உருவானது. ‛‛ரொம்ப நல்லவரா இருக்காரே” என்று அதன் பிறகு இபிஎஸ் என்ன சொன்னாலும் தலையாட்டியது பாஜ.
தொகுதி ஒதுக்கீட்டிலும் இபிஎஸ் நினைத்தது நடந்துள்ளது. அதிலும் அண்ணாமலையின் அபிமான கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையும் அல்லது சிங்காநல்லுார் தொகுதிகளை அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இபிஎஸ் நினைத்தது வேறு. அண்ணாமலைக்கு பிடிக்காத வானதிக்காக கோவை வடக்கை மட்டும் பாஜவுக்கு கொடுத்துவிட்டு மற்ற தொகுதிகளை தான் எடுத்துக்கொண்டார்.
இவ்வளவு நாள் பணியாற்றி தனக்காக செல்வாக்கை வளர்த்து வைத்திருக்க, அந்த தொகுதிகள் இல்லையென்றதும் விக்கித்து நிற்கிறார் அண்ணாமலை. ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். ‛‛எப்போதும் யாரையும் குறைவாக எடை போடக் கூடாது. அக்கம் பக்கம் பார்த்து பேச வேண்டும். யார் தயவும் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம் என்று நினைக்க வேண்டும்.
தமிழக பாஜ தலைவராக இருந்தபோது இபிஎஸ் பற்றி பேசிய பேச்சுகள், அடித்த கமென்டுகளால் இப்போது வேதனையை அனுபவிக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் பாஜவினர்.அண்ணாமலை ஆதரவாளர்களோ, பாஜ தலைமை பற்றியும் அதிமுக தலைமை பற்றியும் இணையத்தில் சரமாரியாக விமர்சனம் செய்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, தேர்தல் பிரசாரத்தில் என்ன நடக்கும், அண்ணாமலை என்ன செய்யப் போகிறார், இபிஎஸ் அமைத்த சக்கர வியூகத்தில் சிக்கிவிட்டாரா, பிரசாரம் செய்வாரா, மாட்டாரா என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து விவாதித்து கொண்டிருக்கின்றனர்.
