நமது டில்லி நிருபர்
டில்லி பயணம் எதற்காக என்று நாளை சொல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இதுவரை இறுதியாகவில்லை.
இந்த பரபரப்பான சூழலில் இன்று (மார்ச் 19) காலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லி விமான நிலையத்தில் இறங்கியதும் நிருபர்கள் பேட்டி எடுக்க சென்றனர். அப்போது, தேர்தல் நேரத்தில் பயணம் எதற்காக? யாரை சந்திக்க இருக்கிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நிருபர்களிடம், நாளை சொல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதில் அளித்தார்.
அவர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிறகு காரில் இபிஎஸ் புறப்பட்டு சென்றார். பாஜவுக்கான தொகுதிகளை இறுதி செய்வதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், டில்லியில் இன்று இரவு அமித் ஷா, நிதின் நபின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
