– நமது டில்லி நிருபர் –
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டை, 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக, ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ என்ற மசோதாவை 2023 செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், மூன்றில் ஒரு பங்கு இடத்தை, பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தாக வேண்டும். ஆனால், இந்த சட்டத்தின் தற்போதைய விதிமுறைகளின்படி, பெண்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு கிடைத்துவிடாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து புதிய எல்லைகள் வரையறை செய்யப்பட்ட பின், தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அதன் பின், பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.
இதையடுத்து, இந்த தள்ளிப்போகும் பிரச்னையை முறியடிக்க மத்திய அரசு புதிய யோசனையை கையில் எடுத்துள்ளது. அதாவது, எல்லை நிர்ணய செயல்முறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு இடையே உள்ள தொடர்பை சட்ட திருத்தம் மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால், தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல், பெண்கள் இடஒதுக்கீட்டை 2029க்கு முன்பாகவே அமல்படுத்த முடியும். இதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
