– நமது டில்லி நிருபர் –
”மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலைகள் மிகவும் கவலை அளிக்கின்றன. இதனால், முன்னெப்போதும் இல்லாத சவால்கள் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்று போன்றவற்றை எதிர்கொண்டதை போல, இதையும் எதிர்கொள்ள வேண்டும். எரிவாயு பிரச்னையை சமாளிக்க, மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழலை பயன்படுத்தி வதந்தி பரப்புவோரை, நாம் வெற்றி பெற செய்யக்கூடாது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளதால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தாக்கம்
இந்நிலையில், மேற்காசிய போர் விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலைகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அங்கு நடக்கும் போர், முன்னெப்போதும் இல்லாத சவால்களை நம் நாட்டுக்கு ஏற்படுத்தி உள்ளது.
எரிசக்தி வினியோகம், சர்வதேச வர்த்தக பாதைகளில் இப்பகுதி முக்கிய பங்கு வகிப்பதால், எந்தவொரு இடையூறும் நம் நாடு உட்பட பல நாடுகளின் பொருளாதார விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர், போர் குறித்த விபரங்களை சபையில் வழங்கியுள்ளனர். இந்த மோதல், மூன்று வாரங்களுக்கும் மேல் நடக்கிறது. இது உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான், இந்த மோதலுக்கு விரைவில் தீர்வு காணும்படி வலியுறுத்தி வருகிறோம்.
அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், நானே நேரடியாக தனிப்பட்ட முறையில் பேசினேன்; பேச்சு மூலம் தீர்வு காண வலியுறுத்தினேன். எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்றும், சர்வதேச வழிப்பாதையில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறினேன்.
இந்த பிராந்தியம், நமக்கு மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியமானது. இங்கு, 1 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது அவசியம். இந்த மோதலில், இந்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்; சிலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். நம் துாதரகங்கள் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இந்தியர்களின் பாதுகாப்பே, என் அரசின் முதன்மை நோக்கம்.
உறுதி
போர் துவங்கியதில் இருந்தும், அதன் பின்னரும், 3.75 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர். இது, அரசின் துரித நடவடிக்கைகளை காட்டுகிறது. இந்த போர், நம் நாட்டுக்கு எதிர்பாராத சவால்களை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவை; தேசிய பாதுகாப்பு தொடர்பானவை; மனிதாபி மானம் சார்ந்தவை.
போர் நடக்கும் பிராந்தியம், பிற நாடுகளுடனான நம் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிப்பாக, நம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளின் பெரும் பகுதி, இந்த பிராந்தியத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய், சமையல் காஸ் ஆகியவை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு வருகின்றன. தற்போதைய சூழலில், நாட்டின் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு வினியோகம் தடைபடாமல் இருப்பதையும், வீடுகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.
முன்னுரிமை
உணவு சமைக்க பயன்படுத்தும் எல்.பி.ஜி., தேவைகளில், 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்கிறோம். அதன் உற்பத்தியை அதிகரிக்க, ஏற்கனவே முன்னுரிமை அளித்துள்ளோம். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவே, 10 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நம் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. 11 ஆண்டுகளில், சூரிய மின்சக்தி திறனை, 3 ஜிகாவாட் அளவுக்கு நம் நாடு அதிகரித்துள்ளது.
முன்னதாக, 27 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது, 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.எண்ணெய் நிறுவனங்கள் வைத்துள்ள கையிருப்பு அல்லாமல், நம்மிடம் 53 லட்சம் டன் அளவுக்கு எரி சக்தி அடிப்படை கையிருப்பு உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களை ஏற்றிச் செல்லும் டேங்கர்கள், பாதுகாப்பாக, நம் நாட்டை வந்தடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தனை நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், இந்த போர்ச்சூழலில், நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்; விழிப்புடன் இருக்க வேண்டும். கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த போரால் சர்வதேச அளவில் உருவாகியுள்ள இந்த கடினமான சூழல், நீண்ட காலத்துக்கு கூட நீடிக்கலாம். எனவே, அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கு முன், கொரோனா போன்ற சவால்களை எதிர்கொண்ட போது, மிகுந்த கவனத்துடன் ஒற்றுமையுடன் நின்றோம்.
எரிவாயு பிரச்னையை சமாளிக்க மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். இந்த சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். இதுவே நாட்டின் வலிமைக்கும், அடையாளத்திற்கும் மையமானவை. இந்த சூழலை பயன்படுத்தி வதந்தி பரப்புவோரை, நாம் வெற்றி பெற செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
![]() |

