நமது டில்லி நிருபர்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதியுடன் புதிய அலுவலகத்திற்குள் நுழைகிறேன் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
டில்லியில் நடந்த ‘சேவா தீர்த்’ புதிய பிரதமர் அலுவலக திறப்பு விழாவில் மோடி பேசியதாவது: இன்று, நாம் அனைவரும் வரலாறு உருவாகி வருவதைக் காண்கிறோம். இந்த நாள், பிப்ரவரி 13, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதியுடன் புதிய பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைகிறேன். நமது இலக்கில் வெற்றி பெற நமக்கு தெய்வீக ஆசீர்வாதங்கள் உள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள் முதலில் பிரிட்டிஷ் பேரரசின் அடையாளங்களாகக் கட்டப்பட்டன என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவற்றின் கட்டுமானத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதும், இந்தியாவை பல தலைமுறைகளாக அடிமை நிலையில் வைத்திருப்பதும் நோக்கமாகும். தற்போது கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் விருப்பம்
புதிய பிரதமர் அலுவலக கட்டடங்கள் இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கட்டப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் ஒரு மகா ராஜாவின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்காது, மாறாக 140 கோடி நாட்டு மக்களின் விருப்பங்களை முன்னேற்றுவதற்கான அடிப்படையை உருவாக்கும். இந்த உணர்வோடு, இன்று நான் இந்த சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவனை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஊக்கம்
21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு இப்போது நிறைவடைந்துள்ளது.வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மட்டுமல்ல, நமது பணியிடங்கள் மற்றும் கட்டடங்களிலும் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். நாடு நிர்வகிக்கப்படும் இடம் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
நேரம் மிச்சம்
உதாரணமாக, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், டில்லி அரசின் பல அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இயங்கி வருகின்றன.இந்த இடங்களுக்கான வாடகைக்கு ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது.ஒவ்வொரு நாளும், 8-10 ஆயிரம் ஊழியர்களை ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு மாற்றுவதற்கு தனித்தனி செலவுகள் இருந்தன. இப்பொழுது சேவா தீர்த் மற்றும் கர்தவ்யா கட்டடங்கள் கட்டப்படுள்ளதால், இந்த செலவுகள் குறைக்கப்படும். நேரம் மிச்சமாகும்.
முன்னேற்றம்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய , அடிமைத்தன மனநிலையிலிருந்து வெளியேறி முன்னேற்ற பாதையில் செல்வது மிகவும் முக்கியமாகும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், அடிமைத்தனத்தின் சின்னங்கள் நம் நாட்டில் இருந்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்வில், ஒரு நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
