நமது நிருபர்''கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். அது, கல்லாப்பெட்டி

நமது நிருபர்

”கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். கல்லாப்பெட்டி கூட்டணி கணக்கு இனி செல்லாது,” என்று வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால், இத்தனை வருடமாய் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்தது தவெக.

ஒவ்வொரு வீட்டிலும் நாம் உயிராக இருக்கிறோம். உங்களை எல்லோரையும் நேரில் சந்திக்க எனக்கு ஆசை. எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

வாக்குறுதி

உங்கள் எல்லோருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்று உருட்டினார். வரும் சட்டசபை தேர்தலை, தமிழகத்திற்கும், டில்லிக்கு இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள்.

இது தமிழகத்துக்கும்- தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள். என்ன சார் டில்லியில் போய் நிற்க போகிறீர்களா? இது பார்லிமென்ட் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறீர்களா?

இது ஏன் தமிழகத்திற்கும், தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதும் புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். நம்ம தமிழக மக்களை மாதிரி நீங்கள் பார்க்கவே முடியாது.

தேர்தல் எதற்கு?

தமிழக மக்கள் சூப்பர் மக்கள் சார். இந்த போருக்கு போகும் போது தான் படையுடன் போவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் பால் டப்பாவை உருட்டி கொண்டு இருக்கிறீர்கள் சார். உண்மைக்கும் இந்த தேர்தல் எதற்காக நடக்கிறது என்று சொல்கிறேன். தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கு இடையே நடக்குற போர்.

தவெக vs திமுக

தமிழக மக்களுக்கும், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர்; தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சார்க்கும் இடையே நடக்குற போர்; இன்னும் சுருக்கமாக செல்லனும்னா விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்குற போர்.

தமிழகம் தான் இந்த விஜய். இந்த விஜய் தான் தமிழகம். தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கு இடையே தான் போர்.

கல்லாப்பெட்டி கூட்டணி

அறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார். கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்கின்றனர். அதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறேன்.

கஷ்டப்பட்டு கூட்டணி சேர்த்திருக்கிறார். அரதப்பழைய கூட்டணி கணக்கு மூலமாகவோ, கொள்ளையடித்த பணத்தில் எங்கள் மக்களை ஏமாற்றியோ ஜெயிக்க முடியாது. இது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.

உறுதி மொழி

”எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம். நன்றி” என கூட்டத்தில் பங்கேற்ற விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

விஜயின் குட்டி கதை

விஜய் சொன்ன கதை பின்வருமாறு: ஒரு குட்டி கதையில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு பெரிய ஊர். 4 ரோடுகள் இணையும் ஜங்ஷன், பிசியாக ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஏரியா, அங்கே சென்டரில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்று கொண்டு இருக்கிறது. அந்த காளை கிட்ட யாரும் போக முடியவில்லை.
அந்த இடம் கேசுவலாக மாற வேண்டும் என்றால் அந்த காளையை அடக்கி, அமைதியாக்க வேண்டும். அந்த ஊரில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். அவர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால் அந்த கூட்டத்தில், ஏற்கனவே காளையை அடங்கியவர்களுடன் இருந்த ஒரு சில பேர், எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்கள் பார்க்காத காளையா, மாடுவா என்று கூறிவிட்டு போகிறார்கள்.
ஒருவராலும் அந்த காளையை தொட கூட முடியவில்லை. எல்லாரையும் அடித்து தூக்கி வீசிப்போட்டது.

அப்போது அந்த கூட்டத்தை விலக்கி விட்டு ஒரு சின்ன பையன், ஒரு என்ட்ரி கொடுக்கிறான். அப்போது அவர்கள் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்களே அடிப்பட்டு படுத்து கொண்டு இருக்கிறோம்.
இவன் விளையாட்டு தனமாக அந்த காளையிடம் அடிப்பட்டு சாக போகிறான் பாவம் என்று ஒரு சிலர் ஒருபக்கம் ஏளனமாக பேசுகின்றனர். மறுபக்கம் அந்த காளையிடம் மாட்டிக் கொண்டு விட்டான் என்று பரிதாபமாக பேசுகிறார்கள்.

அந்த பையன் தைரியமாக கெத்தாக, தில்லாக உள்ளே போனான். காளை முட்ட வரும் போது புல்லுக் கட்டு ஒன்றை சின்ன பையன் காட்டுகிறான்.
பிறகு காளை அந்த சிறுவனின் புல்லை சாப்பிட்டு பின்னால் வந்தது. அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிகள் இதனை பார்த்து தலையை தொங்க போட்டு நின்று கொண்டிருந்தனர். காரணம் அவர்கள் பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நக்கலும், நையாண்டியுமாக பேச்சு. அப்போது சின்ன பையனிடம் ஒருவர் வயதானவர் காளையை எப்படி அடக்கினாய் என்று கேட்டார். எனக்கு அந்த காளை பசியோடு இருந்ததை பார்த்தேன். புல்லுக்கட்டு கொடுத்ததும் சாப்பிட்டு விட்டு வந்தது என்று சொன்னான்.
அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்பது எல்லாம் விஷயமே கிடையாது. யாராக இருந்தாலும் சூழலை சமாளித்து பிரச்னையை சரி செய்கிறானா என்பது தான் விஷயமே. பிறகு அந்த பெரியவர் நீ என்ன சூழலையும் சமாளித்து விடுவாய் என்று கூறி தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார்.
இப்பொழுது அந்த கதையில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழக அரசியல் களம். அந்த பெரியவர் தான் தமிழக மக்கள். அந்த சின்ன பையன் தான் தவெக. முரட்டு ஜல்லிக்கட்டு காளையை ஏன் சொன்னோம் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இவ்வாறு விஜய் கதை சொன்னார்.

கெஞ்சிய விஜய்!

வேலூர் கூட்டம் முடிந்து கிளம்பிய விஜய், ‘நான் செல்லும் போது தயவு செய்து வாகனத்தின் முன்னும், இடையிலும் வரவேண்டாம் என்று உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ என வேண்டுகோள் விடுத்தார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link