நமது நிருபர்
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
பா.ம.க., சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் வேல்முருகன். அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.
கூட்டணியில் இருந்தபோதும், சட்டசபையில் அடிக்கடி அமைச்சர்களுடனும், சபாநாயகர் உடனும் வாக்குவாதம் செய்வதை வேல்முருகன் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் திமுக தரப்பில் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இத்தகைய சூழலில், இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று ஆரம்பம் முதலே வேல்முருகன் வலியுறுத்தி வந்தார். அதை திமுக ஏற்கவில்லை.
இரு நாட்களுக்கு முன் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை வேல்முருகன் மறுத்தார். இந்நிலையில் இன்று, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவரே அறிவித்தார்.
தவாக விலகல்
நிருபர்கள் சந்திப்பில் வேல்முருகன் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை திமுக பொருட்படுத்தவில்லை. 10 கோரிக்கைகளை திமுகவிடம் முன்வைத்தேன். திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே கூறியுள்ளனர். சமூகநீதிக்கு எதிரான சக்திகளை திமுக உடன் வைத்துள்ளது.
சட்டசபையில் ஒற்றை ஆளாய் போராடினேன். திமுக எங்களை புறக்கணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுகிறது. வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கி உடையது தவாக. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
