நமது நிருபர்
துபாயில் ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. வான் பாதுகாப்பு அமைப்பு தக்க நேரத்தில் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஈரான் ஏவிய ஏவுகணைகள், அமீரகத்தின் வான்வெளியில் இடைமறிக்கப்பட்டதால் துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. அசம்பாவிதம் தவிர்க்க வேண்டி, துபாய் சர்வதேச விமான நிலையம், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் ஆகிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் இன்று முதல் (பிப்ரவரி 28) காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
துபாயில் பல்வேறு நிறுவனங்கள், ஹோட்டல்கள் அமைந்துள்ள செயற்கை தீவான பாம் ஜுமேரா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து பலமுறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்பு தக்க நேரத்தில் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை துபாய் அரசின் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது. அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அந்த இடம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தற்போது கட்டுக்குள் இருப்பதாக துபாய் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
துபாய் அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: எத்தகைய சூழ்நிலையிலும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொதுமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகம் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்பவும், சமூக ஊடகங்களில் வீடியோக்கள் அல்லது படங்களை பரப்புவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு துபாய் அரசு தெரிவித்துள்ளது.
