நமது நிருபர்
புதுச்சேரியில் ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்தும், வரிசையில் நின்று ஓட்டு போடுமாறு அன்பாக பேசியும் ரோபோ நிலா அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வஉசி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் வாக்காளர்களை வரவேற்க தாவணி அணிவிக்கப்பட்டு, கையில் ரோஜா பூக்கள் நிரம்பிய தட்டோடு வாக்காளர்களை நிலா என்ற ரோபோ வரவேற்றது. இந்த செயல் பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்தது.
வாக்காளர்களை வரவேற்ற ரோபோ நிலா, ”வணக்கம், வாக்குச்சாவடிக்கு வரவேற்கிறோம். தயவு செய்து அமைதியாக வரிசையில் செல்லுங்கள். தயவு செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டையை தயாராக வைத்து இருங்கள்” என இனிமையான குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.
இதை தான் செய்யும்!
இது குறித்து ரோபோடிக் வடிவமைப்பாளர் கவுசிக் கூறியதாவது: எங்கள் ரோபோ நிலா என்ன செய்யும் என்றால், இங்கு வரும் வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ரோபோவை எங்களது சொந்த சாப்ட்வேர் மூலமாக கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும். எந்த மொழியிலும் பேசி ரோபோ உதவி செய்ய முடியும், என்றார்.
