– நமது நிருபர் -அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு வர விருப்பப்படுவோரை, கட்சியில் சேர்ப்பதற்கு

– நமது நிருபர் –

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு வர விருப்பப்படுவோரை, கட்சியில் சேர்ப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.


தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில், 78 மாவட்டச்செயலர்கள், 25 சார்பு அணிகள், 126 எம்.எல்.ஏ.,க்கள், 22 எம்.பி.,க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், அ.தி.மு.க.,வில் இருந்து வந்த, 11 பேர் மாவட்டச்செயலர்களாக உள்ளனர். தவிர, பலர் அமைச்சர்களாக இருப்பதோடு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களாகவும் சார்பு அணி உள்ளிட்ட பதவிகளிலும் உள்ளனர்.

சமீபத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நிலோபர் கபில், முன்னாள் எம்.பி.,க்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், முன்னாள் எம்.எல். ஏ., மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் பலரும் தி.மு.க.,வில் இணைய காத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தி.மு.க., தலைமைக்கு அப்ளிகேஷன் போட்டு காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு தி.மு.க., தலைமை திடீர் தடை போட்டுள்ளது.

‘அ.தி.மு.க.,வை பலம் இழக்க செய்வதன் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ., வலுவடைந்து விடும்’ என்ற கருத்து, தி.மு.க., மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்தே, அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வர நினைப்போருக்கு ‘நோ என்ட்ரி’ போடப்பட்டுள்ளது. இதை மாவட்டச்செயலர்கள் கூட்டம் வாயிலாக கட்சித் தலைமை சொல்லி உள்ளது. இதனால், விண்ணப்பம் போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link