-நமது நிருபர்-''சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாட்டு காங்கிரசை திமுக பையில் போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான

-நமது நிருபர்-

”சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாட்டு காங்கிரசை திமுக பையில் போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது,” என்று திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

திருநெல்வேலி கே.டி.சி.நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடி இருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நேரம் ஸ்டாலின் சார் கையில் முழு பவர் இருந்திருந்தால் கண்டிப்பா இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டை போட்டு நம்மை இங்கு வரவிடாமல் பண்ணி இருப்பார். அதிகாரமில்லாத ஒரு முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

ஒரே நோக்கம்

திமுக அரசு நமக்கு எவ்வளவு பிரச்னைகள், நெருக்கடிகள், அவதூறுகள் பரப்பினார்கள்.

திமுக கூட்டணியும், பாஜ கூட்டணியும், வெளியில் தனித்தனியாக இருப்பர்; உள்ளுக்குள் இருவரும் ஒன்று தான்; ஒரே நோக்கம் தான். உங்களுக்காக நல்லது செய்ய, உழைப்பதற்கு, கூடவே நிற்பதற்கு இந்த விஜய் வந்துவிட கூடாது. அது தான் அவர்களின் நோக்கம். இந்த விஜய் வந்ததில் இருந்து, அவர்களால் ஊழல் செய்யமுடியாமல் எல்லாவற்றிலும் மண் விழுந்து விட்டது.

கோபத்தில்…

அதனால் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அடுத்தது ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். இந்த கூட்டணி கணக்கு, அந்த கணக்கு ஏதும் எடுபடவில்லை. கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் வைத்து கல்லாப்பெட்டி கூட்டணி என்று ஒன்று சேர்த்து வைத்து இருந்தார். அது எல்லாம் இப்பொழுது கலகலத்து போய் நிற்கிறது.

எல்லாத்தையும் ஒட்ட வைத்து கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல் இருக்கிறது. அப்படி இருக்கு இந்த திமுக கூட்டணி.

இன்னும் மோசம்

பாஜ கூட்டணியில் மற்றும் பலர் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. திமுகவுடன் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு.

அந்த காண்டுக்கு ஒரு காரணம். அவர்கள் வீட்டிலேயே, குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அடுத்த காண்டு. சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் நிற்கிறது.

வெளுத்தது சாயம்

சிறுபான்மை மக்களிடம் திமுகவின் சாயம் வெளுத்து போய்விட்டது. சிறுபான்மை மக்கள் நம் பக்கம் தான் நிற்கிறார்கள். திமுகவுக்கும், பாஜவுக்கும் என் மீது காண்டோ காண்டு. அதுக்காக நாம் என்ன செய்ய முடியும்.

33 வருடமாக ஒவ்வொருவர் மனதில் இடம்பிடிக்க நான் பட்டப்பாடு எனக்கு தானே தெரியும். கட்சிக்கு ஆரம்பித்து விட்டு நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போகவில்லை. வீட்டிற்குள் போன பிறகு தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேன்.

இது மற்றவர்களுக்கு தேர்தல். எனக்கும், எனது கூட நிற்பவர்களுக்கும் எமோஷன். நான் சந்தோசப்பட்டால், மக்கள் சந்தோஷம் படுகிறார்கள். எனக்கு ஒன்று என்றால் மக்களுக்கும், மக்களுக்கு ஒன்று என்றால் எனக்கும் கண் கலங்கும்.

பிரிக்க முடியாது

கரூர் விஷயம் பற்றி ஊருக்கே தெரியும், ஆனால் விஜய் மீது பழியை போட்டார்கள். பழி போட்டு எடுபடவில்லை என்பதால் ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். எஸ்ஓபி என்று தனி நிபந்தனைகள் விதித்தனர். அதுவும் எடுபடவில்லை.

தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு ஒரு அவதூறு பரப்பினார்கள். அது என்ன என்று உங்களுக்கு தெரியும். அதுவும் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகள் நீங்கள் கொடுத்தாலும், இந்த திமுகவாலும், பாஜவாலும், மற்ற பலர் அல்லது வேற யாராலும் மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது.

அதிசய தேர்தல்

234 தொகுதியிலும் விஜய் தான் வேட்பாளர். நம்முடைய வேட்பாளர்கள் அம்பானி, அதானி, டாடா பிர்லா கிடையாது. இந்தியாவிலேயே இது போன்ற ஒரு தேர்தல் நடந்திருக்க முடியாது. 50 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய தேர்தல் இது. அதனால் இந்த சான்சை மிஸ் பண்ணிடாதீர்கள்.

மக்கள் ஒரு எம்ஜிஆர், காமராஜர், அண்ணாதுரை தானா தமிழகத்திற்கு என்று நீங்கள் நினைத்து காத்திருந்தது எனக்கு தெரியும். அதனை மனதில் வைத்து தான் தவெக வந்து இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திற்காக உழைத்து கொண்டே இருக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருநெல்வேலி கே.டி.சி.நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்து உரையாற்றினார். தினமலர் யுடிபூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link