– நமது நிருபர் –
தி.மு.க., மீது, உருது பேசும் ‘தக்னி’ முஸ்லிம்கள் அதிருப்தியாக உள்ளனர்.
தக்னி முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி அமைந்த பின், வக்ப் வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமாகி விட்டது. நிரந்தரமாக முதன்மை அலுவலரை கூட நியமிக்காமல் வஞ்சித்துள்ளது. இதனால், முஸ்லிம் மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளனர்.
சில முஸ்லிம் கட்சிகளை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஏதோ ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தி.மு.க.,வின் பின்னால் நிற்பது போன்ற மாயையை உருவாக்குகின்றனர்.
தி.மு.க., கொடுக்கும் தேர்தல் நிதிக்காக, முஸ்லிம் கட்சிகளும் வாய்மூடி அமைதியாக உள்ளன. தமிழகத்தில் 1.7 சதவீதம் உள்ள, ‘தக்னி’ எனும் உருது பேசும் மக்களை தி.மு.க., வஞ்சிக்கிறது.
வட ஆற்காடு மாவட்டங்கள், கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதியில், அடர்த்தியாக உள்ள ‘தக்னி’ முஸ்லிம்கள், 12 தொகுதிகளில் தி.மு.க., வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வந்தோம்.
அரசியல், அரசு என எதிலும், ‘தக்னி’களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. உருது பள்ளிகளுக்கு எவ்வித சிறப்பு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இருமொழி கொள்கை என்ற பெயரில், உருதை ஒரு மொழிப்பாடம் போல் ஆக்கிவிட்டனர். எனவே, இம்முறை தி.மு.க.,வை நம்ப நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, சன்னி முஸ்லிம்கள், தங்கள் வழிபாட்டு முறைக்கு எதிரானவரை தலைமை ஹாஜியாக நியமித்ததால், தி.மு.க., அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். தற்போது, தக்னி முஸ்லிம் அமைப்புகளும் எதிராக திரும்பி உள்ளதால், இதை எப்படி சமாளிப்பது என புரியாமல் தி.மு.க., தரப்பு தடுமாறுகிறது.
