– நமது நிருபர் –
மதுரை மாவட்டத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலில் திருப்பணி மேற்கொள்ள, முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், இரண்டு ஏக்கர் 40 செண்ட் நிலத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் மற்றும் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள, மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அப்பகுதி முஸ்லிம்கள், கோவில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
…
அதைத் தொடர்ந்து, கோவில் பரம்பரை அறங்காவலர் மகேஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், கோவில் கட்டி முடித்து, கும்பாபிஷேகம் நடத்தும் வரை, காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மதுரை போலீஸ் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, அருள்மிகு விநாயகர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கருப்பணசாமி திருக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகியால், நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோவில் திருப்பணிக்கு, மாநில மற்றும் மாவட்ட வல்லுநர் குழுவின் அனுமதி பெறப்பட்டு, திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில், கோவில் திருப்பணியை தடுக்க, சாகுல் ஹமீது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில், கோவில் திருப்பணிக்கு அனுமதி அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின் திருப்பணிக்கு, தொடர் பாதுகாப்பு வேண்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தாக்கல் செய்து, கடந்த பிப்.,18ல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
இரண்டு உத்தரவுகளின் அடிப்படையில், கோவில் திருப்பணி முடித்து, கும்பாபிஷேகம் நடத்தும் வரை, காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கூறியதாவது:
பழமைவாய்ந்த கோவில் அருகே, 100 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவில் திருப்பணியை மேற்கொள்ள, சமீபத்தில் கிராமத்தினர் முயற்சித்தோம்.
அப்போது, ‘இந்த கோவிலை சீரமைக்கக் கூடாது. வேறு இடத்திற்கு கோவிலை மாற்ற வேண்டும்’ என வலியுறுத்தி, அப்பகுதி முஸ்லிம்கள், கோவிலுக்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச் செய்தனர். இவர்களின் எதிர்ப்பு காரணமாக, கோவில் திருப்பணி இன்னும் துவக்கப்படாமலே உள்ளது. ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ளதால், முஸ்லிம்கள் தடுப்பது நியாயமானதல்ல.
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தடுப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதில், தமிழக அரசு தலையிட்டு, உரிய தீர்வு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
