– நமது நிருபர் –
2024 லோக்சபா தேர்தல் நேரம்.
கடந்த 2007 முதல் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துவிட்டு; 2019 லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் 3.47 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி, ‘இந்த முறை போட்டியிட எனக்கு விருப்பமில்லை’ என்று தி.மு.க.,வின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்தார்.
‘இண்டி’ கூட்டணி மிக வலுவாக உருவெடுத்துக்கொண்டு இருந்தது. காங்., தலைவர் ராகுலின் பஸ் பயண பிரசாரத்திற்கு அபார வரவேற்பு இருந்தது. இப்படி அனைத்தும் கூடி வரும் நேரத்தில் வாய்ப்பை வேண்டாம் என்கிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம்.
அந்த நேரம் தான், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற பேச்சு வலுவாகிக்கொண்டு இருந்தது. உதயநிதி வட்டத்தாருக்கும், குடும்பத்தாருக்கும் ‘கனிமொழி மாநில அரசியலில் ஈடுபட்டு உதயநிதிக்கு போட்டியாக வர திட்டமிடுகிறாரோ’ என்ற சந்தேகத்தால் புழுக்கம் ஏற்பட்டது.
அவர்கள், முதல்வரிடம் கவலை தெரிவிக்கவே, ‘இந்த முறை, நம் இண்டி கூட்டணி தான் ஆட்சிக்கு வரும். காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க.,விடம் தான் சீட் இருக்கும். அதனால், நமக்கு துணை பிரதமர் பதவி உறுதி. அந்த பதவி உனக்குத்தான். டில்லியின் அரசியல் நெளிவு சுழிவுகள் உனக்குத்தான் தெரியும்’ என்று, ஸ்டாலினே கனிமொழியை சமாதானப்படுத்தி அனுப்பினார்.
அதன் பின் தான் தேர்தலில் போட்டியிட கனிமொழி சம்மதித்தார். முந்தைய தேர்தலைவிட இன்னும் அபாரமாக, 3.92 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவு, ‘இண்டி’ கூட்டணி தேசிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் கனிமொழி ஏமாற்றம் அடைந்தார். அவரது கவனம் மீண்டும் மாநில அரசியல் மீது திரும்பியது.
உரசல்
ஆனால், உதயநிதி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் ஓரங்கட்டப்பட்டு, ஒருவரை ஒருவர் தவிர்க்கும் சூழல் உருவானது. இதனால், இருவருக்கும் இடையே உரசல் என்ற நிலை கட்சியினர் மத்தியில் உறுதிப்பட்டது. கனிமொழியை சுற்றி, கடைக்கோடி தென் மாவட்டங்களில் ஓர் அணி வலுவாகத் துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமொழி தன் செல்வாக்கை வளர்க்க உழைத்து வருகிறார். குறிப்பாக துாத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஆகிய திட்டங்கள் வருவதில் முக்கிய பங்காற்றினார்.
டில்லி நிலவரத்தை கூர்ந்து கவனித்து வரும் கனிமொழி, ‘பா.ஜ., மிகவும் வலுவாக இருக்கிறது. குறைந்தது, இன்னும் 10- – 15 ஆண்டுகளுக்கு, மத்தியில் அவர்கள் கோலோச்சுவர் என்பது போல் தான் தெரிகிறது’ என்று தன் வட்டத்தில் தெரிவித்துள்ளார். டில்லியில் அமைச்சர் பதவி வெகு துாரம் என்ற நிலை இருப்பதால், தமிழகத்தில், ஆட்சியில் பங்காற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதனால் தான், திருச்செந்துார் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மக்கள் பணிகளையும் செய்து முடித்திருக்கிறார். கனிமொழியின் விருப்பத்திற்கு ஏற்ப, திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வாக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும், உடல் நிலை காரணமாக, வரும் தேர்தலில், தான் போட்டியிட விரும்பவில்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்தார். இதெல்லாம் கட்சி தலைமைக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
பேச மறுப்பு
ஸ்டாலினை சந்தித்து கனிமொழி தன் கோரிக்கையை வைத்தபோது, ‘பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார். திருப்தி அடையாத கனிமொழி, அது பற்றி பேச, மீண்டும் சந்திக்க பல முறை முயற்சித்தும், ஸ்டாலின் தவிர்த்துவிட்டார்.
தற்போது, ஸ்டாலின் மட்டுமல்ல, அவர் குடும்பத்திலும் கனிமொழியிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை என, கனிமொழி ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். அதனால் தான், தென் மாவட்ட தொகுதி வேட்பாளர் நேர்காணலுக்கு கனிமொழி அழைக்கப்படவில்லை.
இதற்கிடையில், நாடார் சங்கங்களை சேர்ந்தோரும், கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும், கனிமொழியை சந்தித்து, ‘இம்முறை எப்படியாவது நீங்கள் போட்டியிட வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தன் எளிமையான அணுகுமுறையால், கட்சியை கனிமொழி தன்வயப்படுத்தி விடுவார் என்று பதறுவோரின் கை ஓங்கும் நிலை தான் இன்று இருக்கிறது. உதயநிதிக்கும் கனிமொழிக்கும் பைசல் ஆனால் தான் நிலை மாறும் என்று தெரிகிறது.
