மெல்போர்ன்: நியூசிலாந்தின் பிரதமராக 5 ஆண்டுகள் பதவி வகித்த ஜெசிந்தா, வீட்டை விற்று விட்டு குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
பின் தங்கிய நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு காரணங்களுக்காக, முன்னேறிய நாடுகளில் குடியேறி விடுவது வழக்கமாக நடப்பது தான். ஆனால், வளர்ந்த நாடான நியூசிலாந்தில் இப்போது நடந்திருப்பது பலரும் எதிர்பாராத ஒன்று. அந்த நாட்டின் பிரதமராக, தொழிலாளர் கட்சி சார்பில் ஐந்தாண்டுக்கும் மேல் பதவி வகித்த ஜெசிந்தா ஆதெர்ன், 43, நல்ல வேலைவாய்ப்புக்காக ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டார்.
நியூசி.,யில் இருந்த வீட்டை விற்றவர், அந்த தொகையை கொண்டு ஆஸி.,யின் மெல்போர்ன் நகரில் அதை விட பெரிய வீடு வாங்கி விட்டார். இப்போது கணவர், குழந்தைகளுடன் அங்கு குடியேறியும் விட்டார். நியூசிலாந்து நாட்டினர், பிற நாடுகளுக்கு குடியேறுவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. கடந்த நான்காண்டுகளில், வெளிநாடுகளுக்கு குடி பெயரும் நியூசிலாந்து நாட்டவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2025ல் மட்டும் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர், பிற நாடுகளில் குடியேறியுள்ளனர். இது, முந்தைய ஆண்டை காட்டிலும் 4 சதவீதம் அதிகம். ஆனால், 5 ஆண்டு பிரதமராகவும், 15 ஆண்டுகள் எம்.பி.,யாகவும் இருந்த ஒருவரே வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இன்னொரு நாட்டுக்கு செல்கிறார் என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.
ஆஸியில் ஜெசிந்தாவின் கணவருக்கும் நியூசி.,யை காட்டிலும் 50 சதவீதம் கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. நியூசிலாந்தை காட்டிலும் ஆஸி.,யில் குடும்பச் செலவுகளும் குறையும் என்று கணக்கிட்டு ஜெசிந்தா குடும்பத்தினர் குடி பெயர்ந்துள்ளனர்.
நியூசி.,இருந்து பிற நாடுகளுக்கு செல்வோரில், 60 சதவீதம் ஆஸ்ரேலியாவுக்கு செல்கின்றனர். தற்போது ஆஸி.,யில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் நியூசி., நாட்டவர் வசிக்கின்றனர். இது, நியூசி., நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 12.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
