புதுடில்லி: இரு மொழி கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிட கோரிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்:
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி கொள்கையால் வரையறுக்கப்பட்டு உள்ளது. இது, தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் இரு மொழி கொள்கைக்கு எதிரானது என்பதால், அந்த பள்ளிகளை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தை பொறுத்தவரை, 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதன் மூலம், அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற, 1,340 மாணவர்கள், 2024- – 25 கல்வி ஆண்டில் மட்டும், அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல மாணவர்கள் முழுமையாக அரசின், ‘ஸ்காலர்ஷிப்’ பெற்று சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இது தமிழகத்தின் மேம்படுத்தப்பட்ட கல்வியின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது.
கூடுதலாக கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, மத்திய அரசு தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதை செய்யாமல் கூடுதலாக கல்வி நிறுவனங்களை திறப்பது, நிதி சிக்கலை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
