மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் அமைதியாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “மத்திய அரசு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் 26-ம் தேதி காங்கிரஸ் தலைவருக்குக் கடிதம் வந்தது. அப்போதே, `கடந்த 30 மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஏன்?” என்ற கேள்விக் கேட்டு பதில் அனுப்பப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
