மதுரை: ”ஐவர் குழுவை மலை உச்சியில் வழிபட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க, கோவில் நிர்வாகம் அவகாசம் கேட்டுவிட்டு, மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், நான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்வு தோன்றுகிறது,” என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார்.ஆனால், கார்த்திகை தீப நாளில், அவ்வாறு தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து, டிச., 3ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை, மனுதாரர் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தர விடுகிறேன்’ என்றார்.
இந்நிலையில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்’ என, பதில் மனு தாக்கல் செய்தனர்.
அதன் பின், மார்ச் 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றம் நியமிக்கும் ஐவர் குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்கு சென்று, 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். ‘மார்ச் 18ல் போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தகுந்த பதில் அளிக்காவிடில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அவர்கள் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து லோகநாதன், இனிகோ திவ்யன், கோவிலின் தற்போதைய செயல் அலுவலர் ஞானசேகரன் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனு நிலைக்கத்தக்கது தானா என்பதை முடிவு செய்ய, நேற்று மார்ச் 17 ல் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில், தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தனி நீதிபதி டிச., 4ல் பிறப்பித்த உத்தரவிற்கு, ஏப்., 8 வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் சுப்பையா, நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஏன் ஆஜராகவில்லை… அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இனி அவர்களை சட்டப்படி கையாள்வேன். ஆஜராவதிலிருந்து கலெக்டர், கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே விலக்கு அளித்திருந்தேன்,” என்றார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நான் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தேன்.ஆனால், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் இந்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவர்களில் ஒருவர், இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
டிச.,3 ல் நான் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பு என்னையே சாரும் என அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. டிச.,3 ல் பிறப்பித்த உத்தரவை மீறியது தொடர்பான அவமதிப்பு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும்.இதனால் இவ்வழக்கு விசாரணை ஏப்.,9 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
