புதுடில்லி: நான் பணத்தை சம்பாதிக்கவில்லை. மாறாக நேர்மையை தான் சம்பாதித்தேன், என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மதுபான முறைகேடு வழக்கில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: நீதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு அமைப்பும் , ஆணையமும் மிரட்டப்படும்போது நீதிபதி தைரியத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆதாரம் உள்ளதா என நீதிமன்றம் தான் பார்க்க வேண்டும். 600 பக்க உத்தரவில், இந்த விவகாரத்தில் ஒரு வழக்கில் கூட ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பிரதமரும், அமித்ஷாவும் சதி செய்தனர். எங்களை டில்லியில் தோற்கடிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். ஆம் ஆத்மி மீது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது தெரியும்.இதனால், அவர்கள் எங்கள் மீது இந்த வழக்கை தொடர்ந்தனர். நான் நேர்மையை மட்டும் சம்பாதித்தேன். பணத்தை சம்பாதிக்கவில்லை. அவர்களை போல் நான் இல்லை. தற்போது கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும் நேர்மையானவர்கள் என தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
