உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பகதூர்நகர் கிராம பஞ்சாயத்தின் செமரியா கிராமத்தில் நாய்களை கொல்வதற்காக வைக்கப்பட்ட விஷம் காரணமாக கழுகுகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கிராமத்தை சேர்ந்த் சர்பஞ்ச் தேவேந்திர சிங் கூறுகையில், கிராமத்தில் தெருநாய்கள் நிறைய உள்ளன. இந்த நாய்கள் ஒரே நேரத்தில் 7-8 ஆடுகளைக் கொல்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள் திம்ரவுல் பஞ்சாயத்தில் ஆடுகளை வேட்டையாடின.
இறந்த ஆடுகளுக்கு யாரோ விஷம் வைத்ததால், ஆடுகளை கடித்த 5 நாய்கள் இறந்தன. இந்த நாய்களில் ஒன்றை கழுகுகள் தின்றதால் 25 கழுகுகள் உயிரிழந்தன.
இதுதொடர்பாக துத்வா புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்தின் துணை இயக்குநர் கீர்த்தி சௌத்ரி கூறுகையில், இறந்த கழுகுகளின் மாதிரிகள், உள்ளுறுப்புகள் பரிசோதனைக்காக பரேலிக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்த நாய்கள் காட்டு நாய்கள், அவை கிராமத்தில் உள்ள ஆடுகளைத் தாக்கி வந்தன. நாய்களைக் கொல்வதற்காக யாரோ சமைத்த சாதத்தில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அரிசி மாதிரியும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்த கழுகுகள் இமயமலைக் கிரிஃபான் இனத்தை சேர்ந்தவை. 6 கழுகுகள் மீட்கப்பட்டுள்ளன, அவற்றில் 4 கழுகுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பறந்து சென்றுவிட்டன. மீதமுள்ள கழுகுகளுக்கு சரணாலய வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
