நியூயார்க்: ஈரான் மீதான போரில் வெற்றி பெற்றுவிட்டதாக பொதுக்கூட்டம் ஒன்றில், 13 வினாடிகளில் 5 முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் அந்தப் பேச்சை திருத்திக் கொண்டார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள், மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்தாண்டு ஜூன் மாதம் தொடுத்த போர், 12 நாட்களில் முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது, 13வது நாளாக இன்றும் போர் தொடர்ந்தது. இந்தப் போரால், அமெரிக்காவில் பொருளாதார பாதிப்புகளுடன், உள்நாட்டு அரசியல் பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும் என்று, டிரம்புக்கு அவருடைய ஆலோசகர்கள் எச்சரித்தனர்.
இதையடுத்து, ‘ஈரானில் இனி அழிக்க வேண்டியது எதுவுமில்லை; அதனால் போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரும்’ என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், கென்டகி மாகாணத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தார். நாங்கள் வென்றுவிட்டோம், வென்றுவிட்டோம். முதல் ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் முடிந்துவிட்டது, என்று திரும்பத் திரும்பக் கூறி, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
குறிப்பாக, 13 வினாடிகளில், வெற்றி என்ற வார்த்தையை, 5 முறை கூறினார். ஆனால், அடுத்த சில வினாடிகளிலேயே, டிரம்ப் திடீரென தன் கருத்தை மாற்றினார். வெற்றியை மிக விரைவாக அறிவிக்கக் கூடாது; நாம் விரைவில் வெளியேறிவிடக் கூடாது. பணியை முழுமையாக முடிக்க வேண்டும், என்று கூறி, போர் இன்னும் முடியவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
