புதுடில்லி: நிலக்கரியின் விலை உயராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து முதலமைச்சர்கள், தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கூறியதாவது:
நிலக்கரி விவகாரத்தில் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. நிலக்கரித்துறை செயலர், அனைத்து முதல்வர்கள், தலைமை செயலர்களிடமும் பேசியுள்ளார். நாட்டில் எங்குமே நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருக்கக்கூடாது எனவும், அதன் விலையும் உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளேன்.
தற்போது நம் நாட்டில் 80 நாட்களுக்கான நிலக்கரி இருப்பு உள்ளது. அதிகரித்துவரும் தேவையை இதைக்கொண்டே சமாளிக்க முடியும். எனவே, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது. நிலக்கரியின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு.
நாம் உற்பத்தி செய்யும் நிலக்கரியை சேமிக்க போதுமான அளவுக்கு இடம் இல்லை.
மேலும், நிலக்கரி தீப்பிடிக்கக்கூடிய பொருள் என்பதால், அதை நீண்டகாலம் இருப்பு வைக்கவும் முடியாது. அவ்வாறு சேமித்து வைத்தாலும் அதன் தரம் குறையவும் வாய்ப்பு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து 2வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து இந்தியா சாதனை
