அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று முன் எப்போதும் இல்லாத வகையில் 94 என்ற நிலையை நோக்கி சரிந்தது. இது, அன்னிய செலாவணி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, உலகளாவிய சந்தைகளுக்கும், இந்திய ரூபாய்க்கும் தற்காலிக நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு அதிரடியாக சரிவதை தடுக்க, ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, டாலர்களை சந்தையில் விற்று ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த முயன்று வருவதாக தெரிகிறது.
உலகளவில் பிரென்ட் கச்சா எண்ணெய் 110 டாலர் அளவில் இருந்தாலும், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை 156 டாலராக உயர்ந்துள்ளது.
ஏனெனில், இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்களில் 80 சதவீதம் ஓமன் மற்றும் துபாய் சந்தையை சார்ந்தது. அதன் விலை, 150 டாலரை கடந்துவிட்டதால் இந்தியாவின் இறக்குமதி செலவு எகிறியுள்ளது.
இதனால், எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இது, அரசின் நிதிநிலை மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கூடவே, டாலருக்கான தேவை அதிகரிப்பதால் ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்துள்ளது. வரும் நாட்களில் 94 என்பது ரூபாய் மதிப்புக்கு தடுப்பு நிலையாகவும், 92.80 – 93 என்பது ஆதரவு நிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
