நீட் விவகாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தீர்வும் தரமாட்டார்கள் – இயக்குநர் அமீர்

ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையை கொண்டுவருவார்கள் என நம்புவது ஒரு ஏமாற்றுவேலை என்று இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.

நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிற இதேவேளையில், ஜன நாயகன் திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம், ஆனால் இந்தக் கூட்டம், அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என்பதை அவர்களுக்கு கூறுகிறேன். நீட் தேர்வை கொண்டு வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,

எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று சிலர் கூறுவார்கள். அவர்களும் கொண்டு வரமாட்டார்கள். அவர்களும் ஆட்சியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். கடைசிவரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள். அனிதா மரணத்திற்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும், அதிகாரத்தில் இருப்பார்கள், அவர்களும் செய்யமாட்டார்கள். ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையைக் கொண்டுவருவார்கள் என நம்புவது ஒரு ஏமாற்றுவேலை. எந்த அரசும் செய்யாது, எந்தக் கட்சியும் செய்யாது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். அனைத்துக்கட்சியும் ஒன்று சேர்ந்தால் முடியும், ஆனால் அதை அவர்கள் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது பிழைப்புவாதம், அதை அவர்கள் தொடர்ச்சியாக செய்வார்கள்” என்றார்



Source link