கேரள மாநிலம் ,திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.சபரிநாதனுக்கு ஆதரவாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரோடு ஷோ நடத்தினார். அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் பேசிய “மோனே தினேஷா’ என்ற வசனத்தைப் போன்று முதல்வர் பினராயி விஜயனை ஒருமையில் பேசியிருந்தார். ரேவந்த் ரெட்டி பேசியபோது, “பினராயி விஜயனின் எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டது. ‘நீ போ மோனே விஜயா’, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் ஆட்சிக்கு வரும்” என்று பினராயி விஜயனை விமர்சித்திருந்தார். அதன் பின்னர், தெலங்கானாவின் வளர்ச்சி குறித்து விவாதிக்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்து ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்திலும் ‘நீ போ மோனே விஜயா’ என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியிருந்தார். அதுமட்டும் அல்லாது, காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானாவில் நடந்த வளர்ச்சியையும், கேரளாவில் சி.பி.எம் ஆட்சியில் நடந்த வளர்ச்சியையும் நேரடியாக ஒப்பீடு செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான்கு பக்க கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதில், “டியர் ஸ்ரீ ரேவந்த் ரெட்டி, சம்பளமும் ஓய்வூதியமும் தொடர்ச்சியாக கொடுக்கமுடியாமல் திணறும் ஒரு அரசை வழிநடத்தும் முதல்வரிடமிருந்து கேரளம் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. மக்கள் நலத்திட்டங்களின் முன்மாதிரிகளை கற்று தெரிந்துகொள்ளுமாறு தெலங்கானா முதல்வரை கேரளாவிற்கு வரவேற்கிறேன். நவ கேரளத்தின் உருவாக்கத்தின் மூலம் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து முன்னேறிச் செல்வோம்” என்று மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் கடிதம் எழுதியிருந்தார் பினராயி விஜயன்.
