டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்தி பரவி வரும் சூழலில், அவர் உயிருடன் இருந்தால், தேடிப்பிடித்து வேட்டையாடுவோம் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருப்பிடம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‘குழந்தைகளை கொல்லும் குற்றவாளி’ என நெதன்யாகுவை குறிப்பிட்டு, அவரை தேடிப்பிடித்து கொல்லப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதலை துவங்கிய பின், நெதன்யாகு அளித்த முதல் பேட்டியில், ‘ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கி வருகிறோம்’ என தெரிவித்திருந்தார்.
அடுத்ததாக, கடந்த 12ம் தேதி வெளியான நெதன்யாகுவின் வீடியோவில், அவரது ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்றதொரு பிம்பம் தெரிந்தது. இது செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
நெதன்யாகுவின் மகன் யாயிர், கடந்த 9ம் தேதி முதல் தன் சமூக வலைதள பக்கத்தில் எந்த பதிவும் இடவில்லை என்பதும் பல்வேறு ஊகங்களை எழுப்பி இருக்கின்றன.
