நெல்லை: தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார் என்று முதல்வர்

நெல்லை: தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பட்டியலிட்டு பதில் அளித்துள்ளார்.

அவரது பேட்டி;

பீஹார் தேர்தலுக்கு பிந்தைய நிலைமையை ஏன் தமிழகத்துடன் ஒப்பிடுகிறீர்கள்? முதலில் தமிழகத்தின் சட்டசபை தேர்தலை முடிப்போம். உங்களின் கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை சீட் கொடுத்துள்ளீர்கள்? திமுக கூட்டணியில் என்ன நடந்தாலும் அது அவசியமில்லை. இருந்தாலும், மக்களுக்கு அந்த கூட்டணி நன்மை செய்யணும். 5 ஆண்டுகளாக செய்திருக்கின்றனரா? இதுதான் எங்களின் கேள்வி.

5 ஆண்டுகள் மக்களை ஆண்டீர்களே? மக்களுக்கு நல்லது செய்தீர்களா? 22,000 கிலோ கஞ்சா பிடித்திருக்கின்றனரே, விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் படுகொலைக்கு காரணம் என்ன? கஞ்சா, போதை பொருள், இதை நம் முதல்வர் தடுத்துள்ளரா இந்த 5 ஆண்டுகாலத்தில்? மக்கள் நலன் பற்றி பேசாமல், டில்லி, டில்லி என்று பேசினால் என்ன?

பிரதமராக மோடி வந்த பின்னர் 14 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்திற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.350 கோடியில் தூத்துக்குடி விமான நிலையம்., ரூ.650 கோடியில் திருச்சி விமான நிலையம்…இதெல்லாம் மோடி போட்டது, டில்லி போட்டது.

ரேஷன் கடையில் நாம் பொருள் வாங்கிக் கொண்டு இருக்கிறோம், பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கிறார், வாங்கி கொடுப்பது தான் முதல்வர்.. ஆனால் அவரே கொடுப்பது போல் பேசுகிறார்கள். இன்னமும் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டி உள்ளது. முதல்வர் அதை செய்யவில்லை.

ஒவ்வொரு வீடு கட்டுவதிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு டில்லி, டில்லி என்று பேசினால் எப்படி? சரத்குமார் தனியாக மீட்டிங் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது. எனது வீட்டுக்கு நிறைய பேர் வருகின்றனர். நயினார் நாகேந்திரன் கூட்டம் போட்டு பேசுகிறார் என்றால் அதில் என்ன இருக்கிறது?

திருநெல்வேலி மக்கள் 5 முறை சட்டமன்றத்திற்கும், ஒரு முறை பார்லிமெண்டுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். நாங்குநேரி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளும் எனக்கு நெருக்கமானவை. நல்ல ஓட்டு வாங்கி உள்ளேன். எந்த தொகுதியிலும் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link