'நேஷனல் ஹெரால்டு' போல ஊழல்? காங்., சொத்தை மீட்பதில் 'தகிடுதத்தம்'

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் சொத்தை மீட்க, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, அக்கட்சி தலைமை 30 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக, ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை காங்கிரஸ் சொத்தையும் அபகரிக்க, அக்கட்சி தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் காமராஜரால், 1955ல் ‘தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது. இதற்கு, சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அறக்கட்டளை உறுப்பினர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.

டில்லி தலைமை

ஆனால், கடந்த 2015ம் ஆண்டு, தமிழக காங்கிரஸ் தலைவராக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினராக, கட்சியின் அகில இந்திய பொருளாளர் மோதிலால் வோரா நியமிக்கப்பட்டார். இதனால், அறக்கட்டளையின் கட்டுப்பாடு, டில்லி தலைமையிடம் சென்றது.

காமராஜரால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை காங்கிரஸ் தலைமை அபகரிக்க முயற்சிப்பதாக, நாடார் அமைப்புகள் குற்றஞ்சாட்டின. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி குரல்கள் வெடித்தன. இதை, டில்லி தலைமை கண்டுகொள்ளவில்லை.

சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 180 கிரவுண்ட் இடம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். கடந்த 1996ல் அறக்கட்டளை உறுப்பினர்களாக மூப்பனார், சி.சுப்பிர மணியம், பா.ராமச்சந்திரன் , ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர்.

அப்போது, சென்னையில் உள்ள 180 கிரவுண்ட் நிலத்தில், கட்டடங்கள் கட்டி, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 60 சதவீதம்; ரேங்கா பில்டர்ஸ் நிறுவனத்துக்கு 40 சதவீதம் பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக அறக்கட்டளைக்கு, ரேங்கா பில்டர்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் கொடுத்தது.

ஆனால், அந்நிறுவனத்தின் திட்டப்படி கட்டடம் கட்ட, சி.எம்.டி.ஏ., அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின், அறக்கட்டளை உறுப்பினர்கள் மாறியதால், தனியார் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டது. இதனால், 180 கிரவுண்ட் நிலத்தையும், அந்நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப் பேற்றதும், அந்த இடத்தை மீட்க முயன்றார்.

அதை எதிர்த்து தனியார் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டம், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

வழக்கு நிலுவை

இதில், அறக்கட்டளை உறுப்பினர்களான காங்கிரஸ் அகில இந்திய இணை பொருளாளர் விஜய் இந்தர் சிங்லா, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், தேனாம்பேட்டை சொத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, 1996ல், 3 கோடி ரூபாய் கொடுத்த ரேங்கா பில்டர்ஸ் நிறுவனத்திற்கு, 60 கோடி ரூபாய் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

காங்கிரஸ் கட்சி வழங்க வேண்டிய 60 கோடி ரூபாயில், 30 கோடி ரூபாயை காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து கொடுக்கவும், மீதம் 30 கோடி ரூபாயை, காங்கிரஸ் தலைமையிடம் கடனாக பெற்று வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், கட்சிக்குள் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் கடனை அடைக்க, 90 கோடி ரூபாயை காங்கிரஸ் தலைமை கொடுத்தது.

இதன் வாயிலாக, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு சொத்து, சோனியா, ராகுல் உறுப்பினராக உள்ள அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதுபோல், சென்னையில் உள்ள காங்கிரஸின் 2,000 கோடி ரூபாய் சொத்தையும் அபகரிக்க, காங்கிரஸ் தலைமை திட்டமிடுகிறதோ என, அக்கட்சியினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸின் சொத்து, தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்படுவது நல்லதுதான். ஆனால், 1996ல் கொடுத்த மூன்று கோடி ரூபாய்க்காக, இப்போது 60 கோடி ரூபாய் கொடுப்பதாக பேசி முடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அறக்கட்டளை உறுப்பினராக உள்ள சசிகாந்த் செந்தில் எம்.பி., கூட்டத்துக்கு அழைக்கப்படாதது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, கட்சி மேலிடம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Source link