கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துடன் அவர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில், அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது.
இதனை “தாய்க்கழகம் திரும்பும் விழா” என்கிற பெயரில் ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சில காலத்திற்கு முன்பு வரை சகோதரர் ஓ.பி.எஸ் இந்த மேடையில் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் திரும்பியிருக்கிறார்.
அவரையும், அவருடைய இயக்கத்திற்குத் திரும்பியிருக்கும் உடன்பிறப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக வரவேற்கிறேன். கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார்.
முத்தமிழறிஞரை தலைவராக அவர் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட தாயின் மடிக்கு நீங்கள் திரும்பியிருக்கிறீர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக, யாருக்கோ அடிமைச் சேவகம் செய்யப் போனதனால், உரிமைக்குரல் எழுப்பி தாய்க்கழகத்திற்குத் திரும்பியிருக்கிறீர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும் அவருடைய கொள்கைகளையும் மறந்து துரோகத்தின் முழு உருவமானதனால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள்.
சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஓ.பி.எஸை இங்கு பார்க்கும்போது, ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

2008-ல் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, நவம்பர் 11-ம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பன்னீர்செல்வம் பேசினார்.
அடுத்த நாள் காலை வெளிவந்த முரசொலியில், பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம் குறித்த செய்தியை வெளியிட்டார்கள். ஓ.பி.எஸும் முரசொலி செய்தியைக் குறிப்பிட்டு அவையில் பேசினார்.
உடனடியாக கலைஞரும் ‘பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக்கூடாது. பச்சைத் தமிழர் எனப் பெரியார், காமராஜருக்கு பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலியும் கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ எனத் தலைவர் கலைஞர் சொன்னார்.” என்றார்.
