புதுடில்லி: ”படிப்பை எப்போதும் சுமையாக நினைக்காதீர்கள். மதிப்பெண்களை இலக்காக கொள்ளாமல் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்” என பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
குஜராத்தில் உள்ள தேவமோக்ரா, தமிழகத்தில் கோவை, சத்தீஸ்கரில் ராய்ப்பூர், அசாமில் குவஹாத்தி மற்றும் டில்லியில் வசிக்கும் மாணவர்களுடன் தனது இல்லத்தில் மோடி கலந்துரையாடினார். அவர் பொதுத்தேர்வுக்கு பதட்டம் இன்றி தயாராவது குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
சுமையாக….
* மதிப்பெண்களை இலக்காக கொள்ளாமல் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். படிப்பை எப்போதும் சுமையாக நினைக்காதீர்கள். மதிப்பெண்களை இலக்காக கொள்ளாமல் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.
* ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வெற்றி, உங்கள் பெற்றோரின் மரியாதையாக மாறும்.
* பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது சக நண்பர்கள் என்ன கூறினாலும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை மனதில் வைத்து அதனை பின்பற்றுங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சமநிலை இருக்க வேண்டும்.
* வாழ்க்கை திறன்களும், தொழில் சார் திறன்களும் சம அளவில் முக்கியமானவை. அவை கல்வி மூலமாக மட்டுமே பெற இயலும். அரை மனதுடன் கல்வி பயின்றால் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றாது. அனைவரும் முழு கவனத்துடன் கல்வி கற்க வேண்டும்.
* ஒவ்வொருவரும் வாழ்க்கையில் என்ன சாதித்துள்ளனர் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நமது இலக்கு எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. அப்போதுதான் நீங்கள் எப்போதும் வெற்றியடைவீர்கள்.
மலிவு விலையில்…
* நீங்கள் கேமிங்கில் ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் இண்டர்நெட் (டேட்டா) மலிவானது என்பதற்காக நேரத்தை கடத்த அதை பயன்படுத்தக் கூடாது.
*பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிந்து போவார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளேன்.
மதிப்பெண்கள்
* நான் கடந்து போனதைத் திரும்பிப் பார்ப்பதில்லை, வரப்போவதைப் பார்க்கிறேன். சில சமயங்களில் ஆசிரியர்கள் முக்கியமானவற்றை மட்டுமே கற்பிப்பார்கள், நல்ல மதிப்பெண்களைப் பெற உங்களுக்கு உதவ முடியும்.
* நல்ல ஆசிரியர் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவார், எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பார்.
* மாணவர்களின் வேகத்தை விட ஆசிரியரின் வேகம் ஒரு படி முன்னால் இருப்பதை உறுதி செய்வதே ஆசிரியரின் முயற்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
