பதிவுத்துறையில் 'டாப் அப்': லஞ்ச அதிகாரி 'பில்ட் அப்'

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

பெயர் வெளியிட விரும்பாத வாசகர் :

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா, அணிக்கடவு ராமச்சந்திராபுரம் கிராமத்தில் வசிக்கிறேன். எனது பூமியை விற்பனை செய்ய, கிரையத்துக்காக கோமங்கலம் சார்பதிவு அலுவலகத்துக்கு 2025ல் சென்றிருந்தேன். அங்கிருந்த பெண் சார் பதிவாளர், பல்வேறு காரணங்களைக் கூறி கிரையம் செய்ய மறுத்தார். மேலும், ரூ. 4 லட்சம் லஞ்சம் கேட்டார்.

எனது பூமியைக் கிரையம் செய்தே ஆக வேண்டிய சூழல். பத்திர எழுத்தர் உதவியை நாடினேன். அவர் வாயிலாகப் பேசி, ரூ. 3 லட்சம் லஞ்சமாகக் கொடுத்து கிரையம் செய்தேன். எனது பூர்விக சொத்தில் எனது பங்கை விற்பதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. லஞ்சத்தைக் குறைக்கக் கேட்டதற்கு, வெறும் 8 மாத பணிக்கே ரூ. 45 லட்சம் கொடுத்திருப்பதாகவும், பணி நீட்டிப்பு வேண்டுமெனில் ‘டாப்-அப்’ செய்ய வேண்டும் என, அவர்தன் தரப்பு ‘நியாயத்தை’ சொன்னார். இவர்கள் வயிறு வளர்க்க எங்கள் பணம்தான் கிடைத்ததா?

மற்றொரு வாசகரின் புகார்:

நான், திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, கொடிங்கியம் கிராமத்தில் வசிக்கிறேன். கடந்த 2018ல், கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில், எனது தந்தை பெயரில் ஒரு விடுதலைப் பத்திரம் பதிவதற்காகச் சென்றோம். அப்போது சார் பதிவாளராக இருந்தவர், ‘1971ம் ஆண்டு பேனாவால் கையால் எழுதிய மூலப்பத்திரம் பழையதாக இருப்பதால், படிக்க சிரமமாக இருக்கிறது. பத்திர நகல் கண்டிப்பாக வேண்டும்’ என்று கெடுபிடி காட்டினார்.

பத்திர நகல் ஏற்பாடு செய்ய சற்று தாமதமாகும். அதற்குள் குடும்ப உறுப்பினர்களுக்குள் முரண்பாடு ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், அவர்கள் கேட்ட 45 ஆயிரத்தில் இருந்து பேசிக் குறைத்து(!) ரூ.10 ஆயிரம் லஞ்சத்தைக் கொடுத்த பிறகே வேலை நடந்தது. படிக்க சிரமமாக இருக்கிறது என்று காரணம் கூறியவர்கள், ரூ.10 ஆயிரம் கைக்கு வந்ததும் எப்படி படித்தார்கள் என்பதுதான் புரியாத புதிர். மக்களின் அவசரத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் இவர்களை யார்தான் தண்டிப்பது? அதிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை.

தொடரும்..

Source link