திருப்புத்துார்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார். அவருடன் பேசுவதற்கு காலஅவகாசம் உள்ளது,” என, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து நேற்று தரிசனம் செய்ய வந்த அவர் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நல்ல நடிகர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ராஜ்யசபாவில் அவரது கன்னிப்பேச்சில் எல்லோருக்கும் வருத்தம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் இப்படி தமிழ் மொழியை நாகரீகமாக பேசவில்லை’ என்றதை கமல் தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்.
லட்சுமண ரேகை
இது குறித்து அவரின் கவனத்திற்கு சென்றுள்ளதாக அறிகிறோம். மக்களவையில் அடுத்தமுறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது திருத்தத்தை பதிவு செய்வார் என்று நம்புகிறோம். அவர் ராஜ்யசபா உறுப்பினராக தமிழகத்திற்கு உழைக்க நினைக்கிறார். அந்த பொறுப்பு நல்லபடியாக நடக்கட்டும். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மட்டுமில்லை; புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு முதலில் ஆக்கம், ஊக்கம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் நாகரீகம் என்பதற்கு லட்சுமண ரேகை உள்ளது.
கல்விக்கூடத்தில் கஞ்சா
அதை விஜய் கடக்கக் கூடாது என்று சொன்னேன். மற்றபடி அது அவர் கட்சி. அவர்கள் கொள்கை இருந்தால் மக்கள் முன் நிற்கட்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கொள்கையை முன் வைப்போம். மக்கள் முடிவு செய்யட்டும். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தனித்து விடப்படவில்லை. அவர் எங்களோடு தான் இருக்கிறார். இன்னமும் பேச நாட்கள் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்கள் முழுமையாக உள்ளன. எங்கே போகப் போகிறார். கல்விக்கூடத்தில் கஞ்சா கிடைக்கும் நிலையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று எப்படி சொல்ல முடியும்.
அதலபாதாளம்
புள்ளி விபரத்தைப் பாருங்கள். தென்னிந்தியாவில் கடைசியில் இருக்கிறோம். கல்வி கற்கும் தரத்தை பாருங்கள். தமிழகம் கடைசியில் உள்ளது. சி.பி.எஸ்.சி.,ல் ஆண்டுதோறும் தரும் அறிக்கையைப் பாருங்கள். தமிழகம் அதலபாதாளத்தில் உள்ளது. பள்ளிக்கூடத்தில் கஞ்சா விற்கும் நிலையை தி.மு.க., ஆட்சி கொண்டு வந்துள்ளது. என்னைப் பார்த்தால் கட்சியை விட்டு விலகியது போலவா தெரிகிறது.
நிர்வாகிகளின் அன்பான வரவேற்பில் உள்ள போது பா.ஜ.வை விட்டு போவதாக கூறலாமா.ஹிந்தி மொழியால் காங்., தமிழகத்தை விட்டு சென்றது போல பா.ஜ.,வும் தமிழகத்தை விட்டு வெளியேறும் என்று சொல்லும் தி.மு.க., எம்.பி., கனிமொழி நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவர் அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுகிறார். காலையில் ஒன்று மதியம் ஒன்று பேசுகிறார். ஆட்சிக்கு வரும் முன் டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறார். வந்த பின் திறந்து வைத்திருக்கிறார்கள்.
வாக்குறுதிகள்
பிரதமர் மோடி 2014, 2019, 2024 தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் நம் நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்; இதில் தமிழகம் முக்கியத்துவம் பெறும். காரணம் தமிழகம் நதி நீர்ப் பற்றாக்குறையில் உள்ள மாநிலம். நிச்சயமாக இது நடக்கும். இப்போது உள்நாட்டு நீர்வழி மின்சாரம் எடுக்கிறார்கள். அடுத்து நதிகளை சீரமைக்கிறார்கள். பின் நதிகள் இணைக்கப்படும் என்றார்.
