பரமக்குடி: ”தமிழகத்துக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை தர வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., வேட்பாளர்கள் ராஜ கண்ணப்பன், காதர் பாட்ஷா, கதிரவன், காங்., வேட்பாளர் கருமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :
இந்தியாவில் முதல் மாநிலமாக 11.19 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி பெற உழைத்துள்ளோம். ஐந்து ஆண்டுகளில் என்னை செய்திகளில் பார்க்காத நாள் இருக்காது. ஆய்வு கூட்டம், கள ஆய்வுகள், அரசு நலத்திட்டங்கள் என தொடர்ந்து நடந்தன. அரசு இயந்திரத்தை முழுமையாக செயல்பட வைத்தேன். அமைச்சர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை உழைத்து இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சி போதுமா, போதாது. தமிழகத்தை உலக அளவில் தனி பிராண்டாக நீங்கள் வளர்க்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
நமது ஆட்சிக்கு சாட்சி உங்கள் முகங்களின் மகிழ்ச்சியே. இப்படி ஒரு நாளாவது பழனிசாமி பேசியிருக்கிறாரா. அவர் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அடுத்தவருடைய மரணத்தை எதிர்பார்த்து பேசுவது அவருடைய கடமையாக இருக்கிறது. பெண்களை கண்ணியம் இல்லாமல் தொடர்ந்து பேசுகிறார். சாக்கடைக்கு சரிசமமாக பேசும் அவருக்கு ஏப்., 23ல் பாடம் புகட்ட வேண்டும்.
நான் முதல்வரானதும் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயண திட்டம் தான். 2021ல் உங்களிடம் ஆதரவை கேட்ட போது நான் சொன்னேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்து வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி என்பது 2.0 திட்டம்.
இந்தியா, இலங்கை ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கச்சத்தீவை மீட்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.
வடக்கு வாழ்கிறது, தெற்கே தேய்கிறது, என்ற நிலையை மாற்றி அமைத்தேன். மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்ற காரணம் காட்டி மத்தியில் தமிழக பிரதிநிதிகளை குறைக்க பார்க்கிறார்கள்.
பா.ஜ., வை தமிழகத்தில் அனுமதிக்க பல்லக்கு துாக்கியாக மாறிவிட்டார் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. உக்ரைன் போரை நிறுத்தி விட்டேன். அமெரிக்காவை அலற விட்டேன், என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையில் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேச சொன்னால் மவுன குருவாகி விடுகிறார்.
தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைப்பது இல்லை. சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இதுவரை ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ., விற்கு தமிழகம் மீது வரும் அக்கறை வெறும் ஸ்டண்ட் தான். பொது சிவில் சட்டம் குறித்து பழனிசாமி நிலைப்பாடு என்ன.
தமிழகத்தை அவர் ஆட்சி செய்த 4 ஆண்டுகளில் நடந்தது ஊழல்கள் மட்டும் தான். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி. கொடூரமான ஆட்சிக்கு கொடநாடு சாட்சி. கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளம் சாட்சி. துப்பு கெட்ட ஆட்சிக்கு துாத்துக்குடி சாட்சி, பழனி்சாமி தன்னுடைய தவறுகள் மறைக்க தப்பிக்க சரண்டர் ஆன இடம்தான் பா.ஜ., அதற்கு அவர் கொடுத்த விலை தான் தமிழகத்தின் உரிமைகள்.
அ.தி.மு.க., விற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ., வுக்கு விழும் ஓட்டுகள். பா.ஜ., வை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும். டில்லியின் ரிமோட் கன்ட்ரோல் அடிமைகள் தமிழகத்தில் ஆளக்கூடாது. தமிழகத்துக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை தர வேண்டும்.
நேற்று ஐ.பி.எல் மேட்ச் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதில் டில்லி அணியும் தமிழக அணியும் விளையாடின. அதில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதேபோல இந்த தேர்தலில் வெற்றி பெற போவது யாரு. டில்லி அணியா, தமிழக அணியா. புரிஞ்சுக்கோங்க. நாம் போராடுவது ஏதோ தி.மு.க., வெற்றிக்காக மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்துக்காக தான். அடுத்து வெற்றி பெற்று 2.2 ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
