பறவை காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள்; மனிதருக்கு பாதிப்பு இல்லை என அரசு அலட்சியம்

சென்னை : தமிழகத்தில் பறவை காய்ச்சலால் காகங்கள் பரவலாக உயிரிழந்து வரும் நிலையில், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என, தமிழக பொது சுகாதாரத் துறை அலட்சியம் காட்டி வருகிறது.

சென்னை, அடையாறு இந்திரா நகரில், ஜன., 5ம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை செய்த மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பறவை காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தது. மேலும், மாநிலம் முழுதும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இறக்கும் காகங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும், தமிழக தலைமை செயலருக்கு அறிவுறுத்தியது.

தற்போது, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலையை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்திலும் காகங்கள் ஆங்காங்கே உயிரிழந்து வருகின்றன. அதேபோல், கோழி, கொக்கு, புறா ஆகியவையும் ஆங்காங்கே இறந்து கிடக்கின்றன.

கடலுார் கங்கணாங்குப்பத்தில், 10க்கும் மேற்பட்ட காகங்கள், நேற்று காலை உயிரிழந்து கிடந்தன. அந்த காகங்களை கொத்தி சாப்பிட்ட நாட்டு கோழிகளும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால், காகங்கள் மட்டுமே பறவை காய்ச்சலால் உயிரிழக்கின்றன. மற்றவற்றின் இறப்புக்கு பறவை காய்ச்சல் காரணம் இல்லை என்று, தமிழக கால்நடை பராமரிப்பு துறையும், பொது சுகாதாரத் துறையும் தெரிவிக்கின்றன.

ஆனால், இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளால் மனிதர்கள் தொட்டாலே, அவர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை பெரியளவில் மக்களிடையே முன்னெடுக்கவில்லை.

இதுவரை பறவை காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை எனக் கூறப்படுவதால், பெயரளவில் மட்டுமே பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, கால்நடை மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காகங்களிடையே மட்டுமே பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்த கோழி, கொக்கு போன்றவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவற்றின் இறப்புக்கு பறவை காய்ச்சல் காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.

எனினும், பல இடங்களில், வனப்பகுதிகளில் உயிரிழந்து கிடந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link