பல மார்க்கங்கள் வழியே எரிவாயு வருகிறது; தட்டுப்பாடு இருக்காது!

– நமது சிறப்பு நிருபர் –

‘சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பாக நாட்டு மக்கள் பீதி அடைய வேண்டாம்’ என, மேற்காசிய போர் பதற்றம் குறித்து கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான சிறப்புக் குழு உறுதிபட தெரிவித்துள்ளது.

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி தவிர, பல மார்க்கங்கள் வழியே நமக்கு தட்டுப்பாடு இன்றி எரிவாயு வருகிறது. பெட்ரோலியமும் முன்பை விட கூடுதலாக வருகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 12 நாட்களுக்கு மேலாக போர் நீடித்து வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியதால், பல்வேறு நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டதால், பொதுமக்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஹோட்டல்கள், தேநீர் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து வினியோக தொடரில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை நேற்று முன் தினம் மத்திய அரசு அமல்படுத்தியது.

மேலும், நிலைமையை கண்டறிந்து, தீர்வு காணும் வகையிலும், மேற்காசிய நிலவரத்தை கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மத்திய அரசின் முக்கிய துறைகளான எண்ணெய், வெளியுறவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்களின் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

நான்கு அமைச்சகங்கள் கொண்ட இக்குழு, சமையல் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தது.


இது குறித்து பெட்ரோலியத் துறையின் இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது: எல்.என்.ஜி., எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உடன் இரண்டு சரக்கு கப்பல்கள் நம் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக் கின்றன.

தட்டுப்பாடு இல்லாமல் நமக்கு எரிவாயு வருகிறது. எனவே, சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என மக்கள் பீதிய அடைய தேவையில்லை. கச்சா எண்ணெய் வினியோகமும் பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது. வழக்கத்தை விட கூடுதலாகவே பெட்ரோலியப் பொருட்கள் நம் நாட்டுக்கு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி பல மார்க்கங்கள் வழியே நமக்கு கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட சரக்கு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வழக்கமாக ஹார்முஸ் வழியாக 55 சதவீத கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும். ஆனால், போர் பதற்றத்திற்கு பின், பல மார்க்கங்கள் வழியாக 75 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது. இது வழக்கத்தை விட கூடுதலானது.

வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் காத்திருப்பு, வழக்கம் போலவே இரண்டரை நாள் தான். எனவே, நுகர்வோர் முண்டியடித்துக் கொண்டு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் முன்பை விட கூடுதலாக உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. நுாறு சதவீதத்திற்கு மேலாக தற்போது உற்பத்தி நடந்து வருகிறது.

நம் நாட்டில், ஒரு நாளைக்கான எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள். அதில் 97.5 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் 47.4 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் எரிவாயு வினியோகத்தில் தடை ஏற்பட்டது. அதுவும் தற்காலிகமானது தான். ஏனெனில் நாம் மாற்று பாதையில் கொள்முதல் செய்ய ஆரம்பித்துவிட்டோம். நமக்கான தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம்.

தவிர, உள்நாட்டு எல்.பி.ஜி., உற்பத்தியை 25 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளோம். அதற்கான முன்னுரிமையை வீட்டு உபயோக நுகர்வோருக்கு வழங்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயம், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, ‘கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவதையும், பதுக்குவதையும் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தப்பட்டது. வினியோக தொடர் குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது முறையான தகவல்களை வழங்க அந்தந்த மாநில அரசுகள் செய்தி தொடர்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். போரில், இதுவரை இரு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் மாயமாகி விட்டதாகவும் கூறினார்.

Source link