புதுடில்லி: பள்ளி கட்டணம் செலுத்த மறுத்ததால், நான்கு மாணவர்களை வெளியே அனுப்பியுள்ளது, தனியார் பள்ளி. இதை எதிர்த்து, அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் போராட முடிவு செய்துள்ளனர்.
கிழக்கு டில்லி மாவட்டத்தின் மயூர் விஹார் என்ற பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் கடந்தாண்டு கட்டணங்கள்உயர்த்தப்பட்டன. அந்த கட்டணங்களை பள்ளியில் படிக்கும் பிற மாணவர்கள் செலுத்தி விட்டனர். ஆனால், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நால்வரின் பெற்றோர், அந்த கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை.
பள்ளியில் இருந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், உயர்த்தப்பட்ட பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், மார்ச் 9ம் தேதியில் இருந்து, மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று முதல், அந்த நான்கு மாணவர்களின் பெயர்களை நீக்கி, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்துள்ள அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், போராட முடிவு செய்துள்ளனர்.
டில்லியில் உள்ள தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அந்த பள்ளிகளை வரைமுறைபடுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாநில அரசு தயாரித்துள்ள கட்டண உயர்வு பட்டியல்,பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாக, மாணவர்களின் பெற்றோர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
