பழனி நில மோசடி விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை விசாரணை

மதுரை,

பழனி கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.

பழனி மலை அடிவாரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் உள்ள, முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால் சேனாதிபதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க., தி.மு.க.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கள் ரவீந்திரன், வீரா கதிரவன் ஆகியோர், இதே விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தங்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.

நாளை விசாரணை

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பழனி கோவில் நில மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் வருகிற 30-ந்தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

Source link